கத்துக்கனும் பாஸ்: இதுவரை என்ன செஞ்சீங்க? 'டைம்லைன்' கேட்டு மத்திய அரசை நெருக்கும் சந்திரபாபு நாயுடு
Recommended Video
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்திற்கு எனந்னமாதிரி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது, என்ன திட்டங்களை செயல்படுத்த உள்ளீர்கள் என்பதை கால அட்டவணையோடு தெரியப்படுத்த வேண்டும் என்று அம்மாநில முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
ஆந்திர மாநிலம், இரண்டாக பிரிக்கப்பட்டு, தெலுங்கானா உருவாக்கப்பட்டது. ஆந்திராவுக்கு பல சலுகைகள் அறிவிப்பதாக அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் உறுதியளித்திருந்தார்.
2016ல் தற்போதைய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தனது அறிவிப்பில், ஆந்திராவுக்கு சிறப்பு பொருளாதார பேக்கேஜ் வழங்கப்படும் என்றார். ஆனால் வாக்குறுதிகள் நிறைவேறவில்லை.
பட்ஜெட்டில் ஏமாற்றம்
2018-19ம் நிதியாண்டு பட்ஜெட்டில், மத்திய அரசு ஆந்திராவுக்கு சிறப்பு சலுகைகளை அளிக்கும், புதிய தலைநகரமாக உருவாகும் அமராவதி கட்டுமானத்திற்கு நிதி உதவி வழங்கும் என எதிர்பார்த்த பாஜகவின் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசத்திற்கு ஏமாற்றமே மிஞ்சியது. எனவே ஆந்திர எம்பிக்கள் நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொடர் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர். பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியபோது கூட இவர்கள் கோஷங்கள் நிற்கவில்லை.
அதிரடி முடிவு
இந்த நிலையில், தனது கட்சி எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் மூத்த தலைவர்களுடன், காணொலிகாட்சி மூலம், சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார். அப்போது, தங்கள் எதிர்ப்பை எம்.பிக்கள் தொடர வேண்டும் என்றும், சஸ்பெண்ட் செய்யப்பட்டாலும் கூட கவலைப்படாமல் போராட்டத்தை தொடர வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
கேள்விகள்
அதேநேரம், கூட்டணியை விட்டு வெளியேறாதது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிப்பதை போல "இது இரு அரசுகள் நடுவேயான பிரச்சினை. தெருவில் சண்டை போட முடியாது. நாடாளுமன்றத்தில்தான் பேச வேண்டும்" என்று குறிப்பிட்டார் சந்திரபாபு நாயுடு. ஆந்திராவுக்கு மத்திய அரசு இதுவரை செய்தது என்ன? இனி செய்யப்போவது என்ன என்பதை காலநேர தகவலுடன் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும் என தடாலடியாக தெரிவித்தார் சந்திரபாபு நாயுடு.
மாநிலத்தை பிரிக்கும்போது எந்த நிதி ஒதுக்கீடு ஃபார்முலாவையும் பின்பற்றாத மத்திய அரசு, இப்போது நிதி ஒதுக்கும்போது மட்டும் ஃபார்முலா பற்றி பேசுவதாக அதிருப்தி தெரிவித்தார் நாயுடு.
கற்பார்களா தமிழக ஆட்சியாளர்கள்
மத்திய அரசின் கூட்டணியில் இருந்தபோதிலும், கால நேரத்தோடு செய்த திட்டங்களை பட்டியலிட கேட்டுள்ளார் சந்திரபாபு நாயுடு. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் எதிர் நிலைப்பாட்டை எடுத்த, மத்திய அரசுக்கு எதிராக அதனுடன் இணக்கமாக இருப்பதாக தெரிவித்துக்கொள்ளும், அதிமுக தலைமை இதுபோன்ற கேள்விகளை எழுப்புமா? தமிழக உரிமைகளை நிலைநாட்ட தைரியமாக வினாக்களை அடுக்குமா? என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.