ஏட்டைய்யா இங்கிருந்த ரோட்டை காணமய்யா: வடிவேலு ஸ்டைலில் போலீசில் புகார்
டெல்லி: தெற்கு டெல்லியை சேர்ந்த மக்கள் சாலை ஒன்று காணாமல் போய்விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
ஒரு படத்தில் வைகைப்புயல் வடிவேலு கிணற்றை காணவில்லை என்று புகார் கொடுப்பார். அதே ஸ்டைலில் தெற்கு டெல்லியை சேர்ந்த மக்கள் சாலை ஒன்றை காணவில்லை என்று சி.ஆர். பார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சாலையை காணவில்லை என்று அவர்கள் தங்களின் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர். மேலும் சாலையை காணவில்லை என்று கல்காஜி காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆலக்நந்தா பகுதியை சேர்ந்த 33 பேர் கொளுத்தும் வெயிலில் காணாமல் போன சாலையை தேடினார்கள். மேலும் சாலையை நேற்று மாலை 6 மணிக்குள் கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் சன்மானம் அளிக்கப்படும் என்று அறிவித்தனர்.
1.5 கிலோமீட்டர் வரையிலான அந்த சாலை வரைபடத்தில் உள்ளது நிஜத்தில் இல்லை என்கிறார்கள் மக்கள். அந்த இடத்தில் அரசு பள்ளி ஒன்றும், டிடிஏ காலனியும் வந்துவிட்டதாம்.