பசுவுக்கு ஆம்பளைப் புள்ள பொறந்திருக்கு.. ராத்திரி தூங்கினால் காலையில் செத்துருவீங்க.. கலக்கிய வதந்தி
ஹைதராபாத்: பசு மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாகவும், அது பேசியதாகவும், இதனால் ராத்திரி யாரும் தூங்க வேண்டாம் என்றும் அப்படித் தூங்கினால் இறந்து போய் விடுவார்கள் என்றும் வதந்தி பரவியதால் நேற்று இரவு முழுவதும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மக்கள் பீதியடைந்தனர். பலர் ராத்திரி முழுவதும் தூங்காமல் விழித்திருந்ததைப் பார்க்க முடிந்தது.
அவ்வப்போது ஏதாவது வதந்தி கிளம்பி மக்களை பீதிக்குள்ளாவது இந்தியாவில்தான் அதிகம். சகோதரிக்கு பச்சை சேலை வாங்கித் தர வேண்டும், இல்லாவிட்டால் சகோதரனுக்கு ஆபத்து என்று கிளப்பி விடுவார்கள். விநாயகர் சிலை பால் குடித்தது, இயேசுநாதர் சிலையிலிருந்து ரத்தம் வந்தது என்று பீதி ஏற்படுத்தியுள்ளார்கள்.
விநாயகர் சிலை பால் குடித்ததாக முன்பு மும்பையில் பெரிய அளவில் பீதி ஏற்பட்டு பெரும் பரபரப்பும் ஏற்பட்டது. இந்த நிலையில் ஆந்திரா, தெலுங்கானாவில் நேற்று நூதன வதந்தி பரவி மக்களை பயமுறுத்தி விட்டது.

கம்மம் மாவட்டத்தில் கிளம்பிய வதந்தி
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் பொதுமக்கள் நேற்று முன்தினம் வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றனர். அப்போது ஒருவருக்கு, அவரது உறவினர் செல்போனில் தொடர்பு கொண்டார். தெலுங்கானாவில் ஒரு விவசாயி பசு வளர்த்து வருகிறார். அந்த பசு, கன்றுக்கு பதிலாக ஒரு குழந்தையை ஈன்றுள்ளது. பிறந்த சில மணி நேரத்திலேயே பேசிய அந்த குழந்தை, இன்று இரவு தூங்குபவர்கள் மறுநாள் காலை உயிரோடு இருக்க மாட்டார்கள் என கூறியதாக தெரிவித்துள்ளார். இதனால் யாரும் தூங்காதீர்கள். இந்த தகவலை உறவினர்கள், தெரிந்தவர்களுக்கு தெரிவித்து விடுங்கள் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.

எந்திரிங்க எந்திரிங்க
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனே தூங்கிக்கொண்டிருந்த தனது மனைவி மற்றும் குழந்தைகளை எழுப்பி விட்டார். மேலும், அக்கம், பக்கத்தில் உள்ளவர்களை எழுப்பி, நடந்த சம்பவத்தை கூறி அவர்களையும் தூங்க வேண்டாம் எனக்கூறினார். மேலும், போனில் உறவினர்கள், நண்பர்களுக்கு தெரியப்படுத்தினார்.

சாலைக்கு வந்த மக்கள்
இதையடுத்து தூங்கி கொண்டிருந்த அனைவரும் எழுந்து சாலைக்கு ஓடி வந்தனர். சிலர் தங்களது கைக்குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு சாலையில் தஞ்சமடைந்தனர். கிராம மக்கள் வெளியூரில் உள்ள தங்களது உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர்.

காட்டுத்தீயாக பரவிய வதந்தி
சிறிது நேரத்திலேயே செல்போன், எஸ்எம்எஸ் மூலம் கம்மம், நல்கொண்டா, வாரங்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்திற்கும் காட்டுத் தீ போல் இந்த வதந்தி பரவியது.

விடிய விடிய தூங்காமல் விழித்திருந்த மக்கள்
நள்ளிரவு தூங்கிக்கொண்டிருந்த பொதுமக்கள் தகவல் அறிந்ததும் தூங்காமல் குடும்பத்துடன் சாலையில் வந்து விடிய, விடிய விழித்திருந்தனர். பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளுடன் சாலையில் தஞ்சமடைந்தனர்.

போலீஸ் விசாரணை
இதுகுறித்து சிலர் நேற்று அதிகாலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். அதில் இந்த தகவல் வதந்தி என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பொதுமக்களுக்கு பசுவிற்கு குழந்தை பிறந்த தகவல் வதந்தி என தெரிவித்தனர்.

யாரும் "சாகவில்லை"!
நல்லவேளையாக, இந்த வதந்தியைப் பொருட்படுத்தாமல் நேற்று இரவு நன்றாகத் தூங்கிய யாரும் இன்று சாகவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.

"தேங்காயில் பாம் வச்சுட்டாங்களே"... இன்னும் இருக்காங்களே!
தேங்காயில் பாம் வச்சுட்டாங்க என்று வதந்தி கிளப்பி விட்ட "கவுண்டமணி" போல இன்னும் கூட நம்மிடைய ஏகப்பட்ட பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.. அதையும் நம்பும் "உசிலைமணி"களும் இருக்கத்தான் செய்கிறார்கள்... பெரியார் இன்னும் கூட கொஞ்ச காலம் நம்மோடு இருந்திருக்கலாம்!

ஆறு தலைகளுடன் அதிசயக் குழந்தை
இதற்கிடையே, தெலுங்கானா மாநில மருத்துவமனை ஒன்றில் ஆறு தலைகளுடன் அதிசயக் குழந்தை ஒன்று பிறந்ததாகும். பிறந்த சில நொடிகளிலேயே அக்குழந்தை பேசியதாகவும், அப்போது, ‘இன்று இரவு உறங்குபவர்களைக் கொன்று விடுவேன்' என அது மிரட்டியதாகவும் வதந்தி பரவியது.












Click it and Unblock the Notifications