சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டலபூஜைக்கு இன்று நடை திறப்பு - பம்பையில் அசுத்தம் செய்தால் 6 ஆண்டு சிறை
கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று நடை திறக்கப்படுகிறது.
பத்தனம் திட்டா : சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை இன்று தொடங்குகிறது. இதையொட்டி, இன்று மாலை கோயில் நடைத் திறக்கப்படுகிறது.
புனிதம் மிக்க பம்பை நதியில் சோப்பு, ஷாம்பு போட்டு குளித்தால் 6 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில், மண்டல மற்றும் மகரவிளக்குப் பூஜைகளில் பங்கேற்க, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் மாலையணிந்து இருமுடி ஏந்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு மண்டல கால பூஜை நாளை தொடங்குகிறது. சபரிமலை ஐயப்பன் கோயில் புதிய மேல்சாந்தியாக திருச்சூரைச் சேர்ந்த உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாளிகைபுரம் கோயில் மேல்சாந்தியாக அனீஷ் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதிகாலையில் ஐயப்பனுக்கு பூஜை
இன்று மாலை நடை திறக்கப்பட்டு வியாழக்கிழமை அதிகாலை புதிய மேல்சாந்தி ஏ.வி உன்னிகிருஷ்ணன் நடையைத் திறந்து இந்த வருட மண்டல பூஜைகளைத் தொடங்கி வைக்கிறார். தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதன்பின், 3.30 மணி முதல் 11.30 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறுகிறது. பகல் ஒரு மணிக்கு நடை சாத்தப்படுகிறது. மாலை 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு, இரவு 11 மணிக்கு சாத்தப்படுகிறது.

டிசம்பர் 30 மீண்டும் நடை திறப்பு
டிசம்பர் 26 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு மண்டல பூஜை நடக்கிறது. மீண்டும் அன்று இரவு நடை அடைக்கப்பட்டு, மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30 ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்படுகிறது.

ஜனவரி 20 நடை அடைப்பு
ஜனவரி 14 ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடக்கிறது. அன்றைய தினம் மகர ஜோதி தரிசனம் நடக்கிறது. 19 ஆம் தேதியுடன் பக்தர்கள் தரிசனம் நிறைவு பெறுகிறது. 20 ஆம் தேதி பந்தளம் ராஜ குடும்பத்தினர் ஐயப்பனைத் தரிசனம் செய்வதுடன் நடை அடைக்கப்படுகிறது.

மாசடைந்த பம்பை ஆறு
சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் பம்பை ஆற்றில் குளித்தால் பாவங்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குளிப்பவர்கள் சோப்பு, ஷாம்பு போட்டு குளிப்பது, உள்ளாடைகள், மாலைகளை வீசி எறிவது, எச்சில் இலைகளை போடுவது ஆகிய காரணங்களால் பம்பை ஆறு அசுத்தமாகிறது.

சோப்பு, ஷாம்பு பயன்படுத்த தடை
இதை தடுக்கும் நோக்கில், இந்த ஆண்டு பத்தணந்திட்டா மாவட்ட நிர்வாகம் சோப்பு, ஷாம்பு, எண்ணெய் ஆகிவயற்றை பயன்படுத்த தடை விதித்துள்ளது. தடையை மீறுவோருக்கு 6 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
இந்தியா முழுவதிலிருந்து வரும் பக்தர்கள் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த வருடமும் இதே போல் சோப்பு போட்டு குளிக்க தடைவிதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications