கங்கையை சுத்தப்படுத்த கோரி உண்ணாவிரதம் இருந்த பீடாதிபதி மரணம்
வாரணாசி: சுத்தமான கங்கைக்காக உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த பீடாதிபதி மரணமடைந்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி மகாசம்சான் என்னும் பீடத்தின் பீடாதிபதியாக இருந்து வந்தவர், நாக்நாத் யோகேஷ்வர். இவர், கங்கை நதியை சுத்தப்படுத்தக்கோரி 2008-ம் ஆண்டு ஜூலை 19-ந்தேதி முதல் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வந்தார்.
ஆயிரம் நாட்கள் கடந்த நிலையில், 2011 மத்திய பிரதேச கவர்னர் ராம் நரேஷ் யாதவ் விடுத்த வேண்டுகோளை தொடர்ந்து அவர் தனது உண்ணாவிரதத்தை அப்போது கைவிட்டார்.
இந்த நிலையில் நாக்நாத் யோகேஷ்வர் கடந்த சில மாதங்களாக கங்கையை சுத்தப்படுத்த கோரியும், உத்தரகாண்ட்டில் கங்கை நதிக்கு குறுக்கே அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வாரணாசியில் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரது உடல் நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் சுந்தர்லால் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மதியம் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலுக்கான இறுதிச் சடங்கு மணிகார்னிகா பகுதியில் நேற்று மாலை நடந்தது.
கங்கையை சுத்தப்படுத்தக் கோரி உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த 2-வது பீடாதிபதி இவர் ஆவார். 2011-ல் இதே கோரிக்கைக்காக உத்தரகாண்ட்டில் சுவாமி நிகமானந்த் என்னும் பீடாதிபதி 115 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த நிலையில் உயிர் துறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.