தம்பிதுரையை பயன்படுத்தி வீட்டுக் காவலில் வைத்தது போல நடத்தப்பட்டார் சசிகலா புஷ்பா? திடுக் தகவல்
டெல்லி: மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையை பயன்படுத்தி வீட்டுக் காவலில் வைத்தது போல் சசிகலா புஷ்பா நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போயஸ் கார்டனில் ஜெயலலிதா தன்னை அறைந்ததாகவும், எம்.பி பதவியை ராஜினாமா செய்ய வற்புறுத்தியதாகவும் சசிகலா புஷ்பா ராஜ்யசபாவில் பரபரப்பாக பேசினார். தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறி அழுதார். இதனிடைய சசிகலா புஷ்பாவை கட்சியிலிருந்து நீக்குவதாக அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களுக்கு சசிகலா புஷ்பா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் வந்தபோது கூட, விமானத்தில் அங்கும் இங்கும் நகர விடவில்லை. நேற்று சென்னையில், எனது வீட்டுக்கு செல்ல கூட அனுமதிக்கவில்லை.
அதேபோல் இங்கு வந்தபோதும் என்னை எங்கும் செல்ல அனுமதிக்கவில்லை. எங்கேயும் செல்லக் கூடாது என தம்பிதுரை கட்டாயப்படுத்தினார். இருந்த போதிலும் அவருடன் சண்டை போட்டுத்தான் நேற்று மாலை எனது வீட்டிற்கு வந்தேன். எனவேதான், எனது எண்ணங்களை வெளியே தெரிவிக்க பிரஸ் மீட் கூட்ட முடியவில்லை. இதற்காகவே நாடாளுமன்றத்தில் வைத்து பேசினேன்.
என் மீதான நடவடிக்கை 2 மாதம் முன்பிருந்தே தொடங்கியது. பார்லிமென்ட்டில் என்னைப் பேசக் கூடாது என்று கார்டனில் இருந்து பூங்குன்றன் சொன்னார். எனது இந்தப் பதவியை வேறு யாரோ ஒருவருக்கு கொடுக்க விரும்புகிறார்கள். ஆனால், கண்டிப்பாக திருச்சி சிவா மேட்டருக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை.
என்னைப் பற்றி தவறாக தொடர்ந்து சி.எம்.-மிடம் யாரோ சொல்லி இருக்கிறார்கள். வாட்ஸ்-அப் படங்களும் திட்டமிட்டு அனுப்பி இருக்காங்க. அது தொடர்பாக கட்சித் தலைமையிடம் நான் புகார் கொடுத்தேன். ஆனால் என்னைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நான் ஏன் என் எம்.பி. பதவியை ராஜினாமா செய்யவேண்டும்.ஜெயா டிவியிலயே, 'சசிகலா புஷ்பா தலைமையில் மகளிர் அணி சிறப்பாகச் செயல்படுகிறது. அதற்கு அம்மா பாராட்டினார்' என்றும் செய்தி வெளியானது. எனது வாழ்வையே அதிமுகவுக்கு கொடுத்துள்ளேன். அப்போதே அம்மாவிடம் சொன்னேன்.
எனக்கு மகளிர் அணி வேண்டாம் என்று. 'நீதான் இதைச் சரியா பண்ண முடியும் என்று நம்புகிறேன்' என்று சொன்னார். அந்தச் சொல்லுக்காக தெருத் தெருவாக அலைந்து கட்சி வேலைப் பார்த்தேன். இப்போது, 'ஜஸ்ட் ரிசைன் பண்ணு' என்றால் எப்படி முடியும்? அப்போ நான் படித்த படிப்புக்கு, கட்சிக்காகச் செய்த வேலைக்கு என்ன அர்த்தம். திருச்சி சிவா விஷயத்தை இப்போது பயன்படுத்திக் கொண்டார்கள்.
ஆனால் எதிர்பாராத விதமாக என்னை மிரட்டி ராஜினாமா கடிதத்தில் கையெழுத்துப் போடச் சொன்னார்கள். நான் என்ன தப்புப் பண்ணினேன். பர்சனல் வேற. பொலிட்டிக்கல் வேற. என்னை ராஜினாமா செய்யச் சொன்னதுக்கும் திருச்சி சிவா விஷயத்திற்கும் சம்பந்தமில்லை. அதனால்தான் பார்லிமென்ட்டில் நான் மன்னிப்பு கேட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.