ஷாக் செய்தி... மல்லையா உள்ளிட்ட 63 "கருப்பு திமிங்கலங்களின்" ரூ.7,016 கோடி கடன் மறைமுக தள்ளுபடி!
விஜய் மல்லையா உள்ளிட்டோரின் ரூ7016 கோடி கடனை ஓரம் கட்டி வைத்துவிட்டது எஸ்பிஐ.
மும்பை: விஜய் மல்லையா உள்ளிட்ட 63 கருப்பு திமிங்கலங்கள் செலுத்த வேண்டிய ரூ.7,016 கோடி கடன்களை ஒதுக்கி வைத்து மறைமுகமாக தள்ளுபடி செய்துள்ளது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா.
பெருமுதலாளிகள் தர வேண்டிய கடன்களை தள்ளுபடி செய்வதில் இந்திய பொதுத்துறை வங்கிகள் அவ்வளவு ஆர்வம் காட்டுகின்றன. 2013-15-ம் ஆண்டில் 29 வங்கிகள் மொத்தம் ரூ.1.14 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்திருந்தது.
அப்போது ஸ்பேட் பேங்க் ஆப் இந்தியா மட்டும் ரூ.40,084 கோடி வாராக் கடனை தள்ளுபடி செய்தது சர்ச்சையானது. இந்த சர்ச்சைகளுக்கு இடம் கொடுக்காத வகையில் இம்முறை மறைமுகமான யுக்தியை கடைபிடித்திருக்கிறது எஸ்பிஐ வங்கி.
தலையை சுற்றி குப்பையில்...
பெருமுதலாளிகளின் வாரா கடன்களை பகிரங்கமாக தள்ளுபடி செய்வதற்கு பதிலாக Advance Under Collection Account (AUCA) என்ற பெயரில் ஒரு லிஸ்ட்டை உருவாக்கி வைத்துள்ளது எஸ்பிஐ. எவையெல்லாம் வாரா கடன்கள் என முடிவு செய்யப்படுமோ அவையெல்லாம் இந்த பிரிவின் கீழ் கொண்டு செல்லப்பட்டுவிடும்.
கண்டுகொள்ளாமல் இருக்க..
இப்பிரிவின் கீழ் மாற்றப்பட்ட கணக்குகள் இனிமேல் எஸ்பிஐ வங்கியின் பேலன்ஸ் சீட்டில் இடம்பெறாது. எஸ்பிஐ வங்கியின் கணக்குகளில் இருந்து இந்த வார கடன்கள் கண்டுகொள்ளப்படாமல் ஒதுக்கி வைக்க இப்படி ஒரு யோசனையாம்.
விஜய் மல்லையாவுக்கு லாபம்
இப்படி ஓரம்கட்டப்பட்ட கணக்குகள் 63. இதில் தப்பி ஓடிய விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ்தான் அதிக ஆதாயம் அடைகிறது. மொத்தம் ரூ1,201.19 கோடி கடனை வாங்கி ஏப்பம் விட்டு தலைமறைவாகிட்டார் விஜய் மல்லையா...
ரூ 7,016 கோடி கடன்கள் தள்ளுபடி
இதேபோல் மொத்தம் 63 நிறுவனங்களின் சுமார் ரூ 7,016 கோடி கடன்கள் மூடி மறைக்கப்பட்டு அந்த கருப்பு பெரும் திமிங்கலங்களை காப்பாற்றியிருக்கிறது எஸ்பிஐ வங்கி.
நடுத்தெருவில்...
ஆனால் எஸ்பிஐ வங்கியோ, நாங்க எங்கப்பா வாரா கடன்களை ரத்து செய்தோம்னு சொல்லுவாங்களாம்... மக்களும் அதை நம்பிகிட்டே ரூ500, ரூ1000க்கு பேங்க் வாசலிலும் ஏடிஎம் வாசலிலும் நாள் முழுக்க காத்துகிடக்கனுமாம்!