69% இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்க- தமிழக கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம்கோர்ட்!!
டெல்லி: தமிழகத்தில் 69% இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரும் மனுக்களை தள்ளுபடி செய்ய கோரிய தமிழக அரசின் வேண்டுகோளை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மாநிலங்களில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வழங்கப்படும் இட ஒதுக்கீடானது 50 சதவிகிதத்தைத் தாண்டக்கூடாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. ஆனால் அரசியல் சாசன பாதுகாப்புடன் தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்த 69% இடஒதுக்கீடு முறைக்கு எதிராக பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். 69% இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று தங்கள் மனுவில் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழகம் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், மனுக்களை தள்ளுபடி செய்ய முடியாது என்று தெரிவித்துவிட்டது.
இது தொடர்பாக இன்னும் விசாரிக்க வேண்டிய அம்சங்கள் இருப்பதால் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனுக்களை உடனடியாக தள்ளுபடி செய்ய முடியாது என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், இடஒதுக்கீடு விகிதம் பிற மாநிலங்களை விட தமிழகத்தில் மாறுபட்டிருப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை மார்ச் 29-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.