எண்ணூர் அனல் மின்நிலைய ஒப்பந்தம்: தமிழக அரசின் அப்பீல் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!
டெல்லி: எண்ணூர் அனல் மின் நிலைய ஒப்பந்த விவகாரத்தில் சீனா நிறுவனத்துக்கு சாதகமாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த அப்பீல் மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சென்னை எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தலா 660 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 2 யூனிட்டுகள் கூடிய அனல் மின்நிலையம் அமைக்க தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஒப்பந்தப்புள்ளி கோரியது. இதில் திருச்சியில் உள்ள பாரத மிகுமின் நிறுவனமான பெல் மற்றும் சீனாவைச் சேர்ந்த சென்ட்ரல் சதர்ன் சீனா எலக்ட்ரிக் பவர் டிசைன் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் ஆகியவை பங்கேற்றன.

இறுதியாக ரூ. 7,788 கோடியில் புதிய அனல் மின்நிலையம் அமைக்க பெல் நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து சீனா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
பெல் நிறுவனம் மீது பல்வேறு புகார்களை சுட்டிக் காட்டி அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரியது சீனா நிறுவனம். ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் சீனா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து சீனா நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுதாகர், வாசுகி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், தமிழக மின்வாரியத்துக்கும் பெல் நிறுவனத்துக்கும் இடையேயான ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
இந்த ஒப்பந்தம் ரத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த அப்பீல் மனு மீது நீதிபதி தீபக்மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் விசாரணை நடத்தியது. அப்போது இது தொடர்பாக வல்லுநர் குழு தாக்கல் செய்த ஆய்வு அறிக்கையின் நகலை உச்சநீதிமன்றத்துக்கும் சீனா நிறுவனத்துக்கும் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சிவகீர்த்திசிங் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக வல்லுனர் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
நேற்றைய விசாரணையின் போது தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவ், பெல் நிறுவனம் சார்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி ஆகியோரும் சீனா நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞரான கபில்சிபல் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். அத்துடன் அனைவரும் தங்களது தரப்பு வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications