அகத்தியர் மலையிலிருந்து தவறி விழுந்து இறந்த பறவை ஆராய்ச்சியாளர்
திருவனந்தபுரம்: கோவையை சேர்ந்த பறவை ஆராய்ச்சியாளர் ஒருவர், ஆய்வுக்காக அகத்தியர் மலைக்குப் போனபோது அங்கிருந்து வழுக்கி விழுந்து பலியானார். இந்த சம்பவம் அந்த பகுதி மலை அடிவாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை இடையார்பாளையம் சிவாஜி நகரை சேர்நதவர் டாக்டர் பூபதி சுப்ரமணியம். இவர் கோவை சலிம் அலி மத்திய பறவை ஆராய்ச்சி மற்றும் இயற்கை வரலாற்று மையத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.
இவர் பறவைகள் மீது தீராத காதல் கொண்டவராக இருந்துள்ளார். இதனால் இவர் பறவைகள் குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக பல பகுதிகளுககு செல்வது வழக்கம்.
திருவனந்தபுரம் அருகே உள்ள அகத்தியர் மலைக்கு ஆராய்ச்சி செய்வதற்காக புறப்பட்டார். அகத்தியர் மலை கடல் மட்டத்திலிருந்து 1800 மீட்டர் உயரமானதாகும். இந்த மலையில் பல அரிய வகை பறவைகள், மூலிகைகள், மரங்களும் உள்ளன.
இவருடன் அவரது ஆராய்ச்சி மாணவர்கள் ஜின்ஸ் மற்றும் மதுமிதாவும் சென்றனர். இவர்கள் ஆராய்ச்சியை முடித்து விட்டு கிழே இறங்கி கொண்டிருந்தனர்.
2 மணி அளவில் அதிருமலை பகுதியில் பூபதி வேகமாக மலையில் இறங்கி கொண்டிருந்தார். அப்போது ஒரு செங்குத்தான பாறையிலிருந்து அவர் வழுக்கி விழுந்தார். இதில் கிழே விழுந்த அவரது கண்ணீல் மூங்கில் மரக்கம்பு குத்தியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அவரை வழிகாட்டிகளும், மாணவர்களும் மீட்டு கிழே கொண்டு வந்தனர். அதிகாலை 3 மணிக்கு தான் அவரை திருவனந்தபுரம் கொண்டு வர முடிந்தது.
அங்கு திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து பல மணி நேரம் ஆகிவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கோவையில் உள்ள பூபதியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பூபதியின் மனைவி சுபா, மகள் சித்ரா, மகன் சுந்தரம் ஆகியோர் திருவனந்தபுரம் விரைந்துள்ளனர்.
பறவைகள் மீது கொண்ட பாசத்தில் உயிரை இழந்த பூபதியின் உறவினர்கள், நண்பர்கள் சோகத்தில் ஆழ்ந்து்ள்ளனர்.