நாகப் பாம்புடன் எடுத்த செல்ஃபிக்கு பேஸ்புக்கில் 1 லட்சம் லைக்ஸ்.. இளைஞருக்கு ரூ.25,000 அபராதம்!
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் நாகப்பாம்புடன் செல்பி எடுத்துக்கொண்ட இளைஞர் ஒருவருக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் உள்ள வதேரா நகரை சேர்ந்தவர் இளைஞர் யாஷிஷ் பரோட். சில தினங்களுக்கு முன்னர் பாட்டில் ஒன்றில் நாகப்பாம்புவை அடைத்து வைத்து அதனுடன் செல்பி எடுத்துள்ளார்.
மேலும், அந்த செல்ஃபியை '1,000 ரூபாய்க்கு நாகப்பாம்பு விற்பனைக்கு உள்ளது' என தலைப்பிட்டு பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். சில தினங்களில் இந்த புகைப்படத்திற்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் வந்து குவிந்துள்ளன.
Gujarat: Taking a selfie with a cobra and posting it on social media costs a Vadodara-based builder Rs 25,000. pic.twitter.com/kwe6sNRAcO
— ANI (@ANI_news) August 11, 2016
இதுமட்டுமில்லாமல், இப்புகைப்படம் வாட்ஸ்அப்பிலும் வைரலாக பரவியது. இது குறித்து விலங்கு நல அமைப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த இளைஞருக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து புகார் அளித்த விலங்குகள் நல ஆர்வலர் நேகா படேல் கூறியதாவது: எனது நண்பர் அந்த செல்ஃபியை எனது வாட்ஸ்அப் நம்பருக்கு பகிர்ந்தார். இதையடுத்து, நான் அந்த செல்ஃபியை உடனடியாக வனவிலங்குகளை பாதுகாக்கும் வகையில் உள்ள மற்றொரு குரூப்புக்கு அனுப்பி, இந்த போட்டோவை எடுத்தது யார் என்பதை கண்டறிந்தோம். இதன் பின்னர் யாஷிஷ் பரோட் குறித்து மாவட்ட வனத்துறை அதிகாரியிடம் புகார் அளித்தோம் என்று கூறினார்.
இது குறித்து வதோதரா வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: யாஷிஷ் பரோட்டை அழைத்து நாங்கள் விசாரணை நடத்தினோம். அதில் அவர் நாகப்பாம்புடன் செல்ஃபி எடுத்ததையும், அதை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்ததையும் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, அந்த பதிவை அவர் நீக்கிவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக யாஷிஷ் பரோட்க்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்திய வன விலங்குகள் பாதுகாப்பு சட்டம் 1972-ன் படி நாகப்பாம்பு பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினம் என்பதால், அதனை விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்று கூறினார்.