கோபக்கார மாடு முட்டுகிறது...விற்றவர் மீது வழக்குப் போட்ட சட்டீஸ்கர் பெண்
பிலாஸ்பூர்: சட்டீஸ்கரில் கோபக்கார மாடு முட்டுவதாக விற்றவர் மீது வழக்கு தொடுத்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளார் ஜெயா அகர்வால் என்ற பெண்.
சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரைச் சேர்ந்தவர் ஜெயா அகர்வால் (25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த அர்ஜூன்லால் கவுசிக் (50) என்பவரிடம் நான்கு பசுக்களை தலா ரூ. 15 ஆயிரம் கொடுத்து வாங்கியுள்ளார்.
பசுக்களை விற்ற போது, அவை சாதுவானவை, அதிக பால் கொடுக்கும் என அர்ஜூன்லால் கூறியுள்ளார். ஆனால், ஓரிரு நாட்களிலேயே நான்கு பசுக்களும் முரட்டுக் குணம் கொண்டவை என ஜெயாவுக்கு தெரிய வந்துள்ளது.
இதனால், பசுக்களைப் பெற்றுக் கொண்டு தனது பணத்தைத் திரும்பத் தரும்படி அர்ஜூனை அணுகியுள்ளார் ஜெயா. ஆனால், புதிய இடம் என்பதால் பசுக்கள் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதாகவும், பழகினால் சரியாகிவிடும் எனக் கூறி பணத்தைத் திருப்பித்தர அர்ஜூன் மறுத்துள்ளார்.
ஆனால், நாட்களாகியும் மாடுகளின் சுபாவம் மாறவில்லை. தொடர்ந்து முரட்டுத் தனமாகவே நடந்துள்ளன. இதனால் தனது பணத்தைத் திரும்பத் தரும்படி மீண்டும் அர்ஜூனை அணுகியுள்ளார் ஜெயா.
ஆனால், அதற்கு அர்ஜூன் மறுத்து விடவே நுகர்வோர் நீதிமன்றத்தின் உதவியை ஜெயா நாடினார். ‘முரட்டுச் சுபாவம் கொண்ட அந்த மாடுகள் துரத்தி துரத்தி முட்டுவதாகவும், பாலும் குறைவாகவே கறப்பதாகவும், அர்ஜூன்லால் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் அவர் வழக்கு தொடர்ந்தார். மேலும், இது தொடர்பாக அர்ஜூன்லால் தனக்கு ஒரு லட்சம் ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் அர்ஜூன்லால் தரப்பு வாதத்தை ஏற்கவில்லை. விசாரணையின் முடிவில் பசுக்களைத் திரும்ப பெற்றுக் கொண்டு பாதிக்கப் பட்ட ஜெயாவுக்கு நான்கு மாடுகளின் விலை ரூ. 60 ஆயிரம் மற்றும் இழப்பீடு ரூ. 20 ஆயிரம் மற்றும் வழக்குச் செலவு ரூ. 2 ஆயிரம் கொடுக்க வேண்டும் என தீர்ப்பளித்தனர்.
முரட்டு மாடுகளிடமிருந்து தப்பித்த திருப்தியோடு கூடுதலாக ரூ. 20 ஆயிரம் கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கிறாராம் ஜெயா அகர்வால்.