பகோடா விற்பதும் வேலைவாய்ப்புதான்... ராஜ்யசபாவில் அமித்ஷா 'கன்னிப் பேச்சு'
பகோடா விற்பனை செய்வதும் ஒரு வேலைவாய்ப்புதான் என ராஜ்யசபாவில் அமித்ஷா கூறினார்.
டெல்லி: நாட்டில் வேலைவாய்ப்பு குறைந்து போயுள்ளது உண்மைதான்; அதே நேரத்தில் பகோடா விற்பனை செய்வது கூட ஒரு வேலைவாய்ப்புதான் என ராஜ்யசபாவில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் டிவி பேட்டி ஒன்றில், பகோடாவை ஒருவர் விற்பனை செய்து ரூ. 200 சம்பாதிப்பதும் கூட வேலைவாய்ப்புதான் என கூறியிருந்தார். இதனை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இன்று பகோடா விற்பதும் வேலைவாய்ப்பு என்று சொல்லும் பாஜக, நாளை பிச்சை எடுப்பதையும் வேலைவாய்ப்பு என சொல்லக் கூடும் எனவும் எதிர்க்கட்சிகள் சாடி வருகின்றன. மேலும் மத்திய பாஜக ஆட்சியில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்பது காங்கிரஸின் தொடர் குற்றச்சாட்டு.
அமித்ஷா கன்னிப் பேச்சு
இது தொடர்பாக ராஜ்யசபாவில் இன்று விவாதம் நடைபெற்றது. இவ்விவாதத்தில் பங்கேற்று அமித்ஷா ராஜ்யசபாவில் முதல் முறையாக பேசியதாவது:
கூட்டணி ஆட்சி
2104-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு பெரும்பான்மை பலத்தைக் கொடுத்து சரித்திரத்தை உருவாக்கினார்கள். மக்கள் மாற்றத்தை விரும்பியதால் பாஜகவை தேர்வு செய்தனர். பெரும்பான்மை பலம் இருந்த போதும் பாஜக, கூட்டணி கட்சிகளை இணைத்துக் கொண்டே ஆட்சி அமைத்தது. 70 ஆண்டுகாலம் நாட்டை ஒரு குடும்பத்தினர்தான் ஆட்சி செய்தனர். அவர்கள் மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர்.
பேப்பரில்தான் இருந்தன
நாடு முழுவதும் கழிவறைகளை ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் கட்டுவதில் மத்திய அரசு முனைப்புடன் உள்ளது. கடந்த காலங்களிலும் கூட க்ளீன் இந்தியா திட்டங்கள் இருந்தன. ஆனால் அவை வெறும் பேப்பரில்தான் இருந்தன.
வறுமையை வெளியேற்றுவோம்
நாங்கள் வாக்குறுதி அளித்த படி இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை ஸ்டார்ட் அப் இந்தியா, முத்ரா யோஜனா உள்ளிட்ட திட்டங்கள் மூலம் உருவாக்கி உள்ளோம். வறுமையை வெளியேற்றுவோம் என முழக்கமிட்டு பலரும் ஆட்சிக்கு வந்தனர். ஆனால் அதை நோக்கி செயல்படுவது பாஜக மட்டும்தான்.
வேலைவாய்ப்பு குறைவுதான்
நாட்டில் வேலைவாய்ப்பு குறைந்துள்ளது என்பதை ஒப்புக் கொள்கிறோம். ஆனால் இந்த நாட்டை 60 ஆண்டுகாலம் ஆண்டது யார்? இந்த நிலைமை திடீரென உருவானது அல்ல. நாட்டில் பகோடா விற்பனை செய்வது கூட வேலைவாய்ப்புதான். டீ விற்பனை செய்தவர் நாட்டின் பிரதமரானார். அதேபோல் பகோடா விற்பவரின் மகன் நாளை பெரிய தொழிலதிபராக முடியும்.
காங்கிரஸ் மீது தாக்கு
ஜிஎஸ்டி விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் ஒரு பேச்சு, மாநிலங்களில் ஒரு பேச்சு, ஜிஎஸ்டி கவுன்சிலில் ஒரு பேச்சு என செயல்படுகிறது காங்கிரஸ். பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் ஜிஎஸ்டி வரி முறையானது மிகப் பெரும் சீர்திருத்த நடவடிக்கையாகும். முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசானது கூட்டாட்சி அமைப்பை பலவீனப்படுத்தியது. மத்திய அரசு மீது மாநில அரசுகள் நம்பிக்கை இழந்து இருந்தன. ஆனால் மோடி அரசானது மாநிலங்களுக்கு நட்ட ஈடு வழங்குகிறது. இதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மீது மாநிலங்களுக்கு நம்பிக்கை உருவாகியுள்ளது.
ராணுவத்துக்கு அதிகாரம்
சர்ஜிகல் ஸ்டிரைக் நடவடிக்கைகளுக்கு பின் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு அடுத்ததாக நாட்டை பாதுகாக்க இந்தியா எந்த ஒரு எல்லைக்கும் செல்லும் என்பதை காட்டியுள்ளோம். அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ராணுவத்தினருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இஸ்லாமிய பெண்கள் நலன்
இஸ்லாமிய பெண்களின் நலன் கருதியே முத்தலாக் முறையை மோடி அரசு எதிர்க்கிறது. இதற்கு முன்னரும் தீர்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் செயல்படுத்தப்படவில்லை.
இவ்வாறு அமித்ஷா பேசினார்.