தேசத்தின் 'ஏவுகணை மேதை' அப்துல்கலாம் மறைவுக்கு 7 நாட்கள் அரசு முறை துக்கம்- மத்திய அரசு
டெல்லி: இந்திய தேசத்தின் ஏவுகணை மேதையான முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைவுக்கு நாடு தழுவிய அளவில் 7 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை செயலாளர் கோயல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இன்று மேகலயா மாநிலம் ஷில்லாங்கில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டபோது மாரடைப்பால் மயங்கி விழுந்தார். ஷில்லாங் பெத்தானி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவால் நாடே பெரும் துயரத்தில் மூழ்கியுள்ளது. அப்துல் கலாம் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 7 நாட்கள் நாடுதழுவிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது என்று மத்திய உள்துறைச் செயலாளர் கோயல் தெரிவித்துள்ளார்.
நாளை டெல்லி வருகை
இதனிடையே ஷில்லாங்கில் இருந்து அப்துல்கலாமின் உடல் குவஹாத்தி கொண்டு செல்லப்படுகிறது. அங்கு அவரது உடல் பதப்படுத்தப்பட்டு பின்னர் டெல்லிக்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட உள்ளது.
முன்னதாக நாடாளுமன்ற இரு சபைகளிலும் அப்துல்கலாம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்படும்.
ராமேஸ்வரத்தில் இறுதி சடங்கு?
அப்துல்கலாமின் இறுதிச் சடங்குகளை அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் நடத்த வேண்டும் என்று அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை ஏற்று ராமேஸ்வரத்தில் அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறக் கூடும் எனவும் கூறப்படுகிறது.