எம்எல்ஏக்களை பாதுகாக்க களமிறங்கிய சர்மா டிராவல்ஸ்.. காங்கிரஸ், மஜத நம்பும் ஒரே குடும்பம்!
பெரும்பான்மையை நிரூபிக்க எம்எல்ஏக்களை பாஜக குதிரை பேரத்திற்கு அழைக்கும் என்பதால் காங்கிரஸ் மற்றும் மஜத கஷ்டப்பட்டு அவர்களை பாதுகாத்து வருகிறது.
Recommended Video
பெங்களூர்: பெரும்பான்மையை நிரூபிக்க எம்எல்ஏக்களை பாஜக குதிரை பேரத்திற்கு அழைக்கும் என்பதால் காங்கிரஸ் மற்றும் மஜத கஷ்டப்பட்டு அவர்களை பாதுகாத்து வருகிறது. இதற்காக சர்மா டிராவல்ஸ் என்ற தனியார் போக்குவரத்து நிறுவனம் களத்தில் இறங்கியுள்ளது.
கர்நாடகாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத காரணத்தால் பெரிய குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது. பாஜக 104 தொகுதிகளில் வென்று இருந்தாலும் அந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்த போதும், ஆளுநர் அவர்களை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.
பல்வேறு பரபரப்புகளுக்கும், களேபரங்களுக்கும் மத்தியில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றுள்ளார். எடியூரப்பா ஆளுநரிடம், பெரும்பான்மையை நிரூபிக்க 7 நாள் அவகாசம் கேட்டு இருந்தார், ஆளுநர் அவருக்கு 15 நாள் அவகாசம் கொடுத்துள்ளார். உச்ச நீதிமன்றம் பதவி ஏற்பிற்கு தடை விதிக்க மறுத்த நிலையில் தற்போது, எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.
சொகுசு விடுதி
இதனால் காங்கிரஸ், மஜத இரண்டு கட்சிகளுக்கும் தங்கள் எம்எல்ஏக்களை பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இரண்டு கட்சியின் எம்எல்ஏக்களும் தற்போது கர்நாடகாவில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில்தான் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு மிகவும் பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கட்சி உறுப்பினர்கள் அந்த சொகுசு விடுதிக்கு வெளியே பாதுகாப்பிற்கு நிற்கிறார்கள்.
கேரளா செல்கிறார்கள்
ஆனாலும் ஆளும் பாஜக கட்சி இதில் எதுவும் பிரச்சனை செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், இவர்களை இடம்மாற்ற இரண்டு கட்சிகளும் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே இந்த எம்எல்ஏக்களுக்கு கேரளா சுற்றுலாத்துறை அழைப்பு விடுத்து இருந்தது. அங்கு பாஜக பலமாக இல்லாததால், காங்கிரஸ் மஜத உறுப்பினர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. இதனால் இன்னும் 15 நாட்களுக்கு அவர்கள் அங்கு உள்ள சொகுசு விடுதிகளில் தங்க வைக்கப்பட வாய்ப்புள்ளது.
சர்மா பேருந்து
இதற்காக காங்கிரஸ் கட்சி ''சர்மா டிராவல்ஸ்'' என்ற பேருந்து நிறுவனத்தை நாடியுள்ளது. இவர்கள்தான் தற்போது இந்த 114 எம்எல்ஏக்களையும் பாதுகாப்பாக இடமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். காலையில் சட்டமன்றம் முன்பு போராடிய எல்லோரையும் பாதுகாப்பாக மீண்டும் விடுதிக்கு கொண்டு வந்தது இவர்கள் வாகனம்தான். இந்த பேருந்திற்குள் எல்லா விதமான வசதியும் இருக்கும் என்பதால், அவர்கள் சர்மா டிராவல்ஸை நாடியுள்ளனர்.
காரணம்
இந்த டிராவல்ஸை நிறுவிய சர்மா, காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். இயற்கை எய்திவிட்ட இவரின் மகன்கள்தான், இந்த நிறுவனத்தை கவனித்துக் கொள்கிறார்கள். பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பமான இவர்களை நம்பித்தான் 114 எம்எல்ஏக்கள் அனுப்பப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு பாதுகாப்பாக முன்னும் பின்னும் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் புடை சூழ சென்று கொண்டுள்ளது. ஆனால் இவர்கள் எங்கே கொண்டு செல்லப்பட இருக்கிறார்கள் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.