பி.சி.சி.ஐ.யின் அடுத்த தலைவர் ஷசாங் மனோகர்?... சரத்பவார் ஆதரவுடன் தேர்வாக வாய்ப்பு
டெல்லி : இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ஜக்மோகன் டால்மியா காலமானதையடுத்து, அந்த பதவிக்கு முன்னாள் தலைவர் ஷசாங் மனோகர் தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டால்மியா மரணமடைந்ததையடுத்து பி.சி.சி.ஐ. தலைவர் பதவியை பிடிக்க போட்டிகள் கடுமையாக எழுந்து வருகின்றன. அந்த பதவியை பிடிக்க தற்போதைய பி.சி.சி.ஐ. செயலாளர் அனுராக் தாகூர் முயல்வதாக தகவல் வெளியானது.

இதனிடையே முன்னாள் தலைவர் என்.சீனிவாசனும் மீண்டும் தலைவர் பதவியை அடைய திட்டமிட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இதற்கு ஏதுவாக சரத்பவாரை அவர் சந்தித்தது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ஆனால் செய்தியாளர்களிடம் பேசிய சீனிவாசன், தான் தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை என்று தெரிவித்தார்.
இந்நிலையில், சரத்பவார் ஆதரவுடன் பி.சி.சி.ஐ. யின் தலைவர் பதவிக்கு முன்னாள் தலைவர் ஷசாங் மனோகர் தேர்வாக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2008 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை பி.சி.சி.ஐ. தலைவராக பதவி வகித்து அனுபவம் பெற்றவர் ஷசாங் மனோகர். அவர் மீது இதுவரை எந்த வித முறைகேடு புகாரும் எழுந்ததில்லை.
மேலும் ஷசாங் மனோகர் பி.சி.சி.ஐ. தலைவர் பதவிக்கு தேர்வு செய்ய செயலாளர் அனுராக் தாகூரும் ஆதரவு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே ஷசாங் மனோகர் உறுப்பினர்களின் ஆதரவோடு ஒருமனதாக தேர்வாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications