இரோம் ஷர்மிளாவுக்கு கடும் எதிர்ப்பு- தங்க வீடில்லாமல் இரவெல்லாம் அலைந்து மருத்துவமனையில் தஞ்சம்
இம்பால்: 16 ஆண்டுகால உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டு தேர்தல் அரசியலில் குதித்த இரோம் ஷர்மிளாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உண்ணாவிரதத்தை முடித்த இரோம் ஷர்மிளா நேற்று இரவெல்லாம் தங்குவதற்கு இடமில்லாமல் தவித்து கடைசியில் 16 ஆண்டுகாலம் அவர் இருந்த மருத்துவமனையிலேயே தஞ்சமடைய நேரிட்ட சோகம் நிகழ்ந்துள்ளது.
மணிப்பூரில் ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டத்தை எதிர்த்து 2000-ம் ஆண்டு உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார் இரோம் ஷர்மிளா. அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் திடீரென தாம் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டு தேர்தல் அரசியலில் குதிக்கப் போவதாக அறிவித்தார். இதன்படி நேற்று தம்முடைய உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார்.
உண்ணாவிரதப் போராட்டம் இருந்த வரை அவருக்கு இருந்த ஆதரவு அத்தனையும் நேற்று முதல் எதிர்ப்பாகிப் போனது. அவர் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட தொடக்கம் முதலே மணிப்பூர் தனிநாடு கோரும் தீவிரவாத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இரோம் உண்ணாவிரதத்தைக் கைவிடுவதாக அறிவித்த அதே நேரத்திலேயே அவருக்கு எதிரான போராட்டங்களும் வெடித்தன. தாம் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினார் இரோம் ஷர்மிளா. ஆனால் தாய், சகோதரர்கள் உட்பட உறவினர்கள் யாரும் அவரை வீட்டில் தங்க அனுமதிக்கவில்லை. இதற்கு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவார்களோ என்ற அச்சமும் காரணமாக இருக்கலாம்.
மாறாக இரோம் ஷர்மிளா சென்ற இடமெங்கும் எதிர்ப்பு போராட்டங்கள்தான் நடந்தன... பின்னர் போலீசார் அவரை மருத்துவர் தியாம் சுரேஷ் வீட்டுக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் அங்கும் போராட்டம் நடத்தப்பட்டது.
இதனால் வேறுவழியின்றி இரோம் ஷர்மிளா போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் ஒருவழியாக அவர் இதுவரை சிறைவாசம் அனுபவித்த 'மருத்துவமனை'யில் தங்க வைக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் மீண்டும் மருத்துவமனைக்கே அவர் திரும்ப நேரிட்டதுதான் சோகம்!