மோடி மார்ச் 13-ல் இலங்கை செல்கிறார்! 28 ஆண்டுகளுக்குப் பின் இந்திய பிரதமரின் முதல் பயணம்!!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் 13-ந் தேதி இலங்கை வருகைதர உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கடந்த 28 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் அதிகாரப்பூர்வமாக இலங்கை பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை.
இந்திய பிரதமராக இருந்த போது ராஜிவ் காந்தி 1987ஆம் ஆண்டு அரசு முறைப் பயணமான இலங்கை சென்றிருந்தார். அப்போதுதான் இந்தியா-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன் பின்னர் 2008 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் சார்க் மாநாட்டுக்காக இலங்கை சென்றிருந்தார். 2013ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டை பிரதமராக இருந்த மன்மோகன்சிங் புறக்கணித்திருந்தார்.
இந்நிலையில் 28 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு மார்ச் 13-ந் தேதியன்று அரசு முறை பயணம் மேற்கொள்கிறார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனைத் தெரிவித்தார். பிரதமர் மோடி மார்ச் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை இலங்கையில் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார். இந்தியாவுடன் அணு உலை அமைத்தல் உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.