ஸ்மிருதி இராணிக்கு கிராஷ் கோர்ஸுக்கும், டிகிரிக்கும் கூடவா வித்தியாசம் தெரியாது!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் தங்கைக்கு கிராஷ் கோர்ஸுக்கும், டிகிரிக்கும் கூடவா வித்தியாசம் தெரியாது என்று பலரும் டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் போட்டு வதக்கி எடுத்து வருகின்றனர்.
‘எனது அருமை தங்கை' என்று மோடியால் கூறப்பட்டவர் ஸ்மிருதி இராணி. லோக்சபா தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிட்ட அவரை இப்படித்தான் அறிமுகப்படுத்தினார் மோடி.
ஆனால் இன்று இராணி பேசி வருவதும், நடந்து கொள்வதும் மோடிக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை என்று பலரும் கூற ஆரம்பித்துள்ளனர். மோடி எப்படி இருக்கிறார், அவரது தங்கை இப்படியா நடந்து கொள்வது என்று பலரும் கிண்டலடிக்க ஆரம்பித்துள்ளனர்.
மாற்றி மாற்றி பேசும் இராணி...
2004 லோக்சபா தேர்தலில் டெல்லியில் போட்டியிட்டபோது தான் தாக்கல் செய்த மனுவில் தனது படிப்பு குறித்து ஒன்றைக் கூறியிருந்தார் இராணி. அதேபோல 2014 தேர்தலில் தாக்கல் செய்த மனுவில் வேறு ஒரு படிப்பைக் கூறியிருந்தார்.
சர்ச்சைக்குப் பதிலடி...
இதுகுறித்து சர்ச்சைகள் வெடித்தபோது, நான் என்ன படித்தேன் என்பதைப் பார்க்காதீர்கள். நான் எப்படி செயலாற்றுகிறேன் என்பதை மட்டும் பாருங்கள் என்று கோபத்துடன் கூறியிருந்தார் இராணி.
ஏல் பல்கலைக்கழக டிகிரி...
இந்த நிலையில் சமீபத்தில் டெல்லியில் நடந்த மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும்போது என்னைப் பார்த்துப் படிக்காதவள் என்று பலரும் சொல்கிறார்கள். ஆனால் நான் ஏல் பல்கலைக்கழக டிகிரியே வாங்கியவள் என்று கூறி அதிர வைத்தார்.
பாரீன் டிகிரி...
ஆனால் ஏல் பல்கலைக்கழகத்தில் இந்திய எம்.பிக்கள் சிலர் கலந்து கொண்ட கிராஷ் கோர்ஸ் ஆகும். அதற்காக கொடுத்த பங்கெடுத்தார் சான்றிதழைத்தான் அவர் பாரீன் டிகிரி என்று கூறி விட்டார். இதை வைத்து பலரும் இப்போது இராணியை கலாய்த்து வருகின்றனர்.
கேலி, கிண்டல்...
மோடியின் தங்கச்சி என்று பெருமையாகக் கூறிக் கொள்ளும் இராணிக்கு கிராஷ் கோர்ஸுக்கும், டிகிரிக்கும் கூடவா வித்தியாசம் தெரியாது என்று கிண்டல்கள் வெடித்துள்ளன.
விமர்சனம்...
மேலும் மனித வள மேம்பாடு என்ற மிகப் பெரிய துறையை நிர்வகித்து வரும் இராணி, தனது பேச்சால் தனது முட்டாள்தனத்தையும் நிரூபித்துள்ளார் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பொதுமக்கள் அச்சம்...
இப்படிப்பட்டவரின் கையில் உயர் கல்வி நிறுவனங்களை நிர்வகித்து வரும் மிகப் பெரிய துறையை கொடுத்திருக்கிறார்களே, நமது நாட்டின் கல்வித்துறை என்ன பாடுபடப் போகிறதோ என்றும் பலர் அச்சம் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.
அதிர்ச்சி...
ஒருபக்கம் டீ விற்றவர் இன்று நாட்டின் பிரதமராகியுள்ளதை பெருமையுடன் கூறி வரும் நிலையில், அறிவிலித்தனமாக பேசி வரும் ஒருவர் உயர் கல்வித்துறையை நிர்வகிக்கும் துறையின் அமைச்சராக இருப்பது அதிர்ச்சியாகவும் உள்ளது.
மது கிஷ்வார்...
இராணியை தொடக்கத்திலிருந்தே கடுமையாக விமர்சித்து வரும் மது கிஷ்வார் கூறுகையில், 6 நாள் கிராஷ் கோர்ஸுக்கும், டிகிரிக்கும் கூட வித்தியாசம் தெரியாத ஒருவர் எச்ஆர்டி அமைச்சராக உள்ளதை என்னவென்று சொல்வது.
கத்துக்குட்டிப் பேச்சு...
நீங்கள் அதி புத்திசாலியாக இருந்தால் உங்களை அமெரிக்க பல்கலைக்கழகங்கள் பாடம் நடத்தக் கூப்பிடும். நீங்கள் கத்துக் குட்டியாக இருந்தால் தலைமைத்துவம் குறித்து கிராஷ் கோர்ஸ் படிக்கத்தான் பல்கலைக்கழகங்கள் அழைக்கும் என்று நக்கலடித்துள்ளார்.
என்னவென்று சொல்வதம்மா.. வஞ்சி உந்தன் பொது அறிவை... என்றுதான் பாடத் தோன்றுகிறது.