ராகுல் வந்துள்ளாரா?.. லஸ்ஸி கடைக்காரரிடம் கேள்வி கேட்டு வாயடைத்து போன ஸ்மிருதி இரானி- வைரல் வீடியோ
அமேதி: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் அமேதி தொகுதியில் லஸ்ஸி கடைக்காரரிடம் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம், அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகவே இருந்து வந்தது. கடந்த 1981 ஆம் ஆண்டு இடைத்தேர்தல் நடத்தப்பட்ட போது ராஜீவ் காந்தி அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதையடுத்து 1984, 1989, 1991 ஆகிய தேர்தல்களிலும் அமேதியில் தொடர்ந்து எம்பியாக ராஜீவ் காந்தி தேர்வு செய்யப்பட்டார். கடந்த 1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அந்த தொகுதி காலியாக இருந்தது.

காங்கிரஸ் வெற்றி
இதையடுத்து இடைத்தேர்தல் நடத்தப்பட்டு சதீஷ் சர்மா என்பவர் காங்கிரஸ் சார்பில் வென்றார். இவரே அடுத்து நடந்த 1996 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் வென்றார். பின்னர் 1998ஆம் ஆண்டு பாஜகவின் சஞ்சய் சிங் எம்பியாக நீடித்தார். 1999 ஆம் ஆண்டு சோனியாகாந்தி போட்டியிட்டு வென்றார். அவருக்கு பிறகு 2004 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ராகுல்காந்தி போட்டியிட்டு வென்றார்.

3 முறை போட்டி
தொடர்ந்து அமேதி தொகுதியில் 3 முறை போட்டியிட்டு ஹாட்ரிக் வெற்றியை பெற்றார். இதையடுத்து 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் இந்த தொகுதியானது பாஜகவின் கையில் சென்றது. அக்கட்சியின் சார்பில் ஸ்மிருதி இரானி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலின் போது ராகுல்காந்திக்கும் ஸ்மிருதி இரானிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. மேலும் வார்த்தை போரும் ஏற்பட்டது.

தண்ணீர்
இந்த நிலையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சராகவும் அமேதி தொகுதி எம்பியுமாக உள்ள ஸ்மிருதி இரானி தொகுதிக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அங்கு ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர் 70 ஆண்டுகள் காங்கிரஸ் குடும்பத்தினரால் இந்தத் தொகுதி மக்களுக்கு தண்ணீர் கூட வழங்க முடியவில்லை என்றார்.

லஸ்ஸி கடை
இதையடுத்து அமேதியில் உள்ள பிரபல அஷ்ரப் லால் லஸ்ஸி கடைக்கு சென்றார். அப்போது அங்கு லஸ்ஸி குடித்த அவர் அந்த கடைக்காரருடன் உரையாடினார். அப்போது ராகுல் காந்தி குடும்பத்தினர் இத்தனை ஆண்டுகளாக எம்பியாக இருந்தார்களே, ஒரு முறையாவது உங்கள் கடைக்கு லஸ்ஸி குடிக்க வந்துள்ளார்களா என கேள்வி எழுப்பினார்.

பிரியங்கா காந்தி
அதற்கு அவரோ வந்துள்ளார்களே. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் நிறைய பேர் வந்துள்ளார்கள் என்றார். இதை கேட்டதும் ஸ்மிருதி முகத்தில் ஈயாடவில்லை. தான்தான் முதல் முறையாக இந்த கடைக்கு வந்துள்ளதாக கடைக்காரர் சொல்வார் என எதிர்பார்த்தார். ஆனால் அது நடக்கவில்லை. கடைக்காரரின் பதிலை கேட்ட அங்கிருந்தவர்கள் சிரித்தனர். மேலும் இந்த வீடியோவை வைரலாக்கியுள்ளனர். இந்த வீடியோவை அங்கு சுற்றியிருந்தவர்களில் ஒருவர் எடுத்துள்ளார்.

ராகுல் காந்தி
இதே போல் ஸ்மிருதி இரானி ஒரு கரும்பு ஜூஸ் கடையிலும் ராகுல் காந்தி குடும்பத்தினர் வந்து ஜூஸ் குடித்தனரா என கேட்டுள்ளார். அதற்கு அவரும் ராகுல் காந்தி வந்துள்ளார் என கூறியுள்ளார்.

மோடி வந்தாரா
அனைவரும் ராகுல், பிரியங்கா, சோனியா, ராஜீவ் காந்தி, நேரு ஆகியோரின் பெயர்களையே காலையிலும் மாலையிலும் தெரிவித்து வருகிறார்கள். இதனால் சிலருக்கு அவர்களுடைய பெற்றோர் மூதாதையர்களின் பெயர்கூட நினைவுக்கில்லை என்கிறார் ஒரு வலைஞர்.

லஸ்ஸி கடைக்காரர்
லஸ்ஸி கடைக்காரர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் பெயர்களை கூறியதும் ஸ்மிருதி இரானியின் முகத்தை பார்த்த போது நீங்கள் இந்த கேள்வியை கேட்டது தவறு என நினைத்தது எங்களுக்கு வெளியில் தெரிந்தது. இதற்கு பேசாமல் மோடி இந்த கடைக்கு வந்துள்ளாரா என நீங்கள் கேட்டிருக்கலாம் என்கிறார் ஒரு வலைஞர்












Click it and Unblock the Notifications