உளவு பார்த்த விவகாரத்தில் திருப்பம்: எனக்கு தெரிந்துதான் செய்யப்பட்டது.. பாதிக்கப்பட்ட பெண்!
டெல்லி: 2009ம் ஆண்டில், குஜராத்தில் ஒரு பெண்ணின் தொலைபேசி உரையாடல்கள் காவல்துறையால் ஒட்டுக்கேட்கப்பட்டதாகவும், அதற்கு அம்மாநில முதல்வர் மோடியின் உத்தரவுதான் காரணம் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதையடுத்து குஜராத் அரசு கடந்த டிசம்பர் மாதம் ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு விசாரணையை துவக்கியது.
இந்நிலையில் மேலும் ஒரு நீதிபதியை கொண்டு மோடிக்கு எதிரான புகாரை விசாரிக்க மத்திய அரசு முடிவெடுத்தது. இதுகுறித்து அறிந்ததும், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்து அதுபோன்ற விசாரணையை நடத்தினால் தனது மகளின் அடையாளம் வெளிக்காண்பிக்கப்பட்டுவிடும் என்று கூறி விசாரணைக்கு தடை கோரினார். புகார்தாரரின் கோரிக்கை குறித்து பதிலளிக்க மத்திய மற்றும் குஜராத் மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் வழக்கில் புது திருப்பம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணே உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தன்னை உளவுபார்த்தது சட்டத்துக்கு உட்பட்டா இல்லையா என்பதை விசாரிக்க கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
அந்த மனுவில் மேலும் கூறியிருப்பதாவது: "எனது பாதுகாப்பு உறுதிப்படுத்த விடுக்கப்பட்ட தனிப்பட்ட கோரிக்கையை நிறைவேற்றியதற்காக நானும் எனது தந்தையும் குஜராத் அரசுக்கு நன்றியுடையவர்களாக இருப்போம். எனக்கும் தெரிந்துதான் எனது தொலைபேசி அழைப்புகள் கண்காணிக்கப்பட்டன. எனவே இதுகுறித்த அதிகப்படியான விசாரணைகள் எனது தனிமையை கெடுத்துவிடும். எனவே விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் " என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணையை வரும் வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றம் எடுத்துக்கொள்ள உள்ளது.












Click it and Unblock the Notifications