கோவிந்தசாமி தூக்கு ரத்து விவகாரம்... விவாதத்துக்கு வர கட்ஜூவுக்கு உச்சநீதிமன்றம் சம்மன்!
டெல்லி: கேரளாவில் செளம்யா என்ற இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி கோவிந்தசாமிக்கான தூக்கு தண்டனையை ரத்து செய்த தீர்ப்பு குறித்து விவாதிக்க வருமாறு முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூக்கு உச்சநீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.
கேரளாவில் 2011-ம் ஆண்டு ஓடும் ரயிலில் இருந்து செளம்யாவை கீழே தள்ளி படுகாயமடைந்த நிலையிலும் அவரை பலாத்காரம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த கோவிந்தசாமிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த மாதம் உச்சநீதிமன்றம் இந்த தூக்கு தண்டனையை ரத்து செய்து 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையாக மாற்றியது.
அப்போது, இந்த செளமியா கொலைக்கு உள்நோக்கம் இருப்பதாக நிரூபிக்கப்படவில்லை என தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. அப்போது இத்தீர்ப்பு குறித்து தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ விமர்சித்திருந்தார்.

மிகப்பெரும் தவறிழைப்பு
ஃபேஸ்புக்கில் கட்ஜூ, சௌம்யா வழக்கில் உச்சநீதிமன்றம் மிகப்பெரும் தவறை இழைத்து விட்டது. கொலை தொடர்பான சட்டப் பிரிவுகளை உச்சநீதிமன்றம் சரியாக ஆராயவில்லை.

மறு ஆய்வு
சட்டத்தில், கொலை பற்றிய 300 ஐ.பி.சி பிரிவில் உள்ளவற்றை நீதிமன்றம் சரியாக கவனிக்கத் தவறிவிட்டது. இதில் முதல் பிரிவு மட்டும் கொலைக்கான உள்நோக்கம் தேவை என்கிறது. எஞ்சிய 3 பிரிவுகளுமே எந்தவொரு உள்நோக்கம் இல்லை என்றாலும் அது கொலைதான் என்கிறது. இவற்றை கருத்தில் கொள்ளாமல் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வருத்தம் தருகிறது. இந்த தீர்ப்பு குறித்து திறந்த நீதிமன்றத்தில் மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என பதிவிட்டிருந்தார்.

விவாதத்துக்கு அழைப்பு
தற்போது இது தொடர்பான விவாதத்துக்கு வருமாறு உச்சநீதிமன்றம் கட்ஜூக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. நீதிபதிகள் ரஞ்சன் கோகய், பி.சி. பந்த் மற்றும் யு.யு. லலித் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், கட்ஜூ மீது நாங்கள் மதிப்பு வைத்துள்ளோம். இருப்பினும் எங்கள் தீர்ப்பில் பிழை இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியதை கவனத்தில் கொண்டு விவாதத்துக்கு வருமாறு அழைக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

முதல்முறை
இந்திய நீதித்துறை வரலாற்றில் இப்படியான ஒரு விவாதத்துக்கு அழைப்பு விடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications