30ம் தேதி ஏமாற்றினாலும் 4ம் தேதி நிச்சயம் தென்மேற்கு பருவமழை துவங்கும்: வானிலை ஆய்வு மையம்
டெல்லி: தென்மேற்கு பருவமழை வரும் 4ம் தேதி துவங்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு கோடை வெயில் உச்சத்தை தொட்டது. அதனால் நாடு முழுவதும் மக்கள் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் தவித்து வந்தனர். வெயிலுக்கு நாடு முழுவதும் 2 ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். தென்மேற்கு பருவ மழை மே மாதம் 30ம் தேதி துவங்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தது மக்களுக்கு ஆறுதலாக இருந்தது.
அவர்கள் தெரிவித்தது போன்று தென்மேற்கு பருவமழை கடந்த 30ம் தேதி துவங்கவில்லை. மாறாக வெயில் தான் மக்களை வாட்டி எடுத்தது. இந்நிலையில் இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய உயர் அதிகாரி சிவானந்தபாய் கூறுகையில்,
தென்மேற்கு பருவ மழை வரும் 4ம் தேதி துவங்கும். கடந்த மாதம் 21ம் தேதி தென்மேற்கு பருவமழை இலங்கையின் தென் பகுதியை அடைந்தது. ஆனால் அங்கிருந்து இந்தியா நோக்கி வருவதற்குள் அரேபியக் கடலில் ஏற்பட்ட மாற்றத்தால் தென்மேற்கு பருவ மழை துவக்கம் தாமதம் ஆகியுள்ளது என்றார்.
கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் எதிர்பார்த்ததை விட 12 சதவீதம் குறைவாக மழை பெய்தது. இதனால் வேளாண் வளர்ச்சி 0.2 சதவீதம் தான் ஏற்பட்டது. இந்த ஆண்டு கூடுதலாக மழை பெய்தால் தான் தானிய உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.