திருப்பதி மாடவீதியில் ஷூ போட்டு நடந்த இலங்கை பிரதமர்... தேவஸ்தான அதிகாரிகள் அதிர்ச்சி
திருப்பதி: ஏழுமலையான தரிசனம் செய்வதற்காக நேற்று திருப்பதி வந்த இலங்கை பிரதமர் ஜெயரத்னா தாரங்கா மாடவீதியில் ஷூ போட்டு நடந்து வந்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருமலைக்கு நேற்று காலை வந்த இலங்கை பிரதமர், பத்மாவதி நகரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா ஓய்வு விடுதிக்கு சென்றார். அவரை கோவில் துணை நிர்வாக ஸ்ரீனிவாச ராஜூ பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் ஏழுமலையான் தரிசனத்துக்கு அழைத்து வந்தனர்.
முதலில் புஷ்கரணியில் உள்ள வராகமூர்த்தியை வழிபட இலங்கை பிரதமர் ஜெயரத்னா காரில் வந்தார். காரில் இருந்து இறங்கி காலில் ஷு அணிந்தபடியே அவர் சில அடிதூரம் நடந்தார்.
மாடவீதிகளில் செருப்பு அணியக் கூடாது என்பதால் இதனை பார்த்த தேவஸ்தான அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். சற்று தொலைவில் நின்ற நிர்வாக அதிகாரி ஸ்ரீனிவாசராஜூ ஓடி வந்து பிரதமர் ஜெயரத்னாவிடம் கோவில் சம்பிரதாயங்களை விளக்கினார். இதையடுத்து ஜெயரத்னா மீண்டும் காரில் ஏறி தனது ஷுவை காரில் கழற்றி விட்டு வெறுங்காலுடன் நடந்து வந்தார்.
அங்கவஸ்திரம் அணிந்து தான் மூலவரை வழிபட வேண்டும் என்பதுதான் மரபு. ஆனால் இலங்கை பிரதமரிடம் அங்கவஸ்திரம் இல்லை. இதையடுத்து கோவில் அதிகாரியே ஒரு அங்கவஸ்திரத்தை ஜெயரத்னாவுக்கு அணிவித்து கோவிலுக்குள் அழைத்து சென்றனர்.
சுமார் 30 நிமிடம் கோவிலுக்குள் இருந்த ஜெயரத்னாவுக்கு வேத பண்டிதர்கள் தீர்த்த பிரசாதம் மற்றும் லட்டு பிரசாதம் வழங்கி ஆசீர்வதித்தனர். தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு வெங்கடாசலபதி உருவ படத்தை நினைவு பரிசாக வழங்கினர்.
நேற்று இரவு திருப்பதியில் தங்கிய ஜெயரத்னா இன்று காலை பெங்களூரு புறப்பட்டு சென்றார்.
முன்னதாக ஜெயரத்னே வந்த காரில் பெட்ரோல் தீர்ந்து விட்டது. திருமலையில் பெட்ரோல் நிலையம் கிடையாது என்பதால் கார் டிரைவர் தவித்தனர்.
இதையடுத்து ஜெயரத்னா ஓய்வு எடுக்கும் நேரத்தில் டிரைவர் திருப்பதி சென்று பெட்ரோல் நிரப்பி வந்தார்.
ஜெயரத்னா வருகையால் திருப்பதியில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது. சாதாரண பக்தர்கள் தரிசனம் 1 மணி நேரம் நிறுத்தப்பட்டது.