பிசிசிஐ தேர்தலில் என்.சீனிவாசன் போட்டியிட முடியாது - சுப்ரீம் கோர்ட் அதிரடி தடை!
டெல்லி: இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவி உள்பட எந்தப் பதவிக்கும் என்.சீனிவாசன் போட்டியிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட் இன்று அதிரடியாக கூறி விட்டது.
2013ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் இடம் பெற்ற மேட்ச் பிக்ஸிங் தொடர்பான வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இந்தத் தீர்ப்பு இந்திய கிரிக்கெட் வாரியத்தை ஒட்டுமொத்தமாக உலுக்கி எடுக்கும் வகையில் உள்ளன.
இதில் முக்கியமானது பிசிசிஐ நிர்வாகிகள், ஐபிஎல் அணிகளின் உரிமையாளராக இருக்க முடியாது என்பதாகும்.
குறிப்பாக சீனிவாசனுக்குத்தான் இந்தத் தீர்ப்பு பெரும் பாதகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. தற்போது அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராக இருக்கிறார்.
இன்றைய தீர்ப்பில் சீ்னிவாசன் தொடர்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவின் முக்கிய அம்சங்கள்.
பிசிசிஐ பதவி அல்லது ஐபிஎல் உரிமையாளர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைத்தான் சீனிவாசன் வகிக்க முடியும் என்று சுப்ரீ்ம் கோர்ட் கூறி விட்டது. இதனால் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளராக இருக்கும் சீனிவாசன், பிசிசிஐ தலைவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் சுப்ரீம் கோர்ட் கூறி விட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சீனிவாசன் வாங்குவதற்காகவே பிசிசிஐயின் விதி 6.2.4 திருத்தப்பட்டது. அந்தத் திருத்தத்தை இன்று சுப்ரீம் கோர்ட் ரத்து செய்து விட்டது. எனவே இனிமேல் எந்த பிசிசிஐ நிர்வாகியும், ஐபிஎல் அணிகளை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேட்ச் பிக்ஸிங் வழக்கிலிருந்து சீனிவாசன் விடுவிக்கப்பட்டாலும் கூட அவரால் பிசிசிஐ தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது அவர் முன்பு உள்ள ஒரே வாய்ப்பு - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை யாரிடமாவது விற்பது மட்டுமே. அல்லது பிசிசிஐ தலைவர் பதவியை மறந்து விட வேண்டும்.