முதல்வன் பட பாணியில் உத்தரகண்டின் ஒருநாள் முதல்வராக இன்று பதவியேற்கும் கல்லூரி மாணவி!
டேராடூன்: தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி உத்தரகண்ட் மாநிலத்தின் முதல்வராக கல்லூரி மாணவி சிருஷ்டி கோஸ்வாமி பதவியேற்கவுள்ளார்.
இன்று நாடு முழுவதும் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அனைத்து மாநிலங்களிலும் பெண்களை கவுரவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புகளை செய்ய திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில் ஹரித்துவாரைச் சேர்ந்த சிருஷ்டி கோஸ்வாமி என்ற கல்லூரி மாணவி உத்தரகண்ட் மாநிலத்தின் ஒரு நாள் முதல்வராக செயல்படவுள்ளார். இவர் அந்த மாநிலத்தின் கோடைக்காலத் தலைநகரான கெயிர்செயின் பகுதியில் உள்ள அலுவலகத்தில் பணியாற்றுவார்.

நிரூபிக்க முடிவு
இதுகுறித்து சிருஷ்டி கூறுகையில் இதை என்னால் நம்பவே முடியவில்லை. வாழ்நாளில் யாருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பை பெற்றுள்ளேன். இளைஞர்கள் மிகச் சிறந்த முறையில் செயல்பட முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் எனது செயல்பாடுகள் இருக்கும் என்றார்.

முதல்வர்
இந்த ஒரு நாளில் அவர் அடல் ஆயுஷ்மான் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்ட அரசின் வளர்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்கிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் இவர் உத்தரகண்ட் மாநிலத்தின் சிறுவர்களுக்கான சட்டசபையில் முதல்வராக இருந்து வருகிறார்.

விளக்கம்
அவர் ஒரு நாள் முதல்வராக பதவியேற்கும் முன்னர் அதிகாரிகள் அவருக்கு அரசின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளிக்கவுள்ளார்கள். இதற்கான கடிதத்தை உத்தரகண்ட் குழந்தைள் உரிமை பாதுகாப்பு ஆணையம், மாநிலத்தின் முதன்மை செயலாளருக்கு எழுதியிருந்தது.

நிருபர்
ஷங்கர் இயக்கத்தில் முதல்வன் என்ற படத்தில் இதுபோன்ற ஒரு நாள் முதல்வர் கான்செப்ட் இருந்திருக்கிறது. ரகுவரன் முதல்வராக பதவியில் இருப்பார். அவரிடம் நிருபராக பேட்டி எடுக்கும் அர்ஜூன், ரகுவரனை கேள்விக் கணைகளால் தொடுப்பார். உடனே ரகுவரன், ஒரு நாள் முதல்வராக இருந்தால்தான் அந்த பதவியின் கஷ்டம் தெரியும் என்று கூற அர்ஜூனும் சிறிய யோசனைக்கு பிறகு ஒப்புக் கொள்வது போன்று காட்சிகள் நகரும்.












Click it and Unblock the Notifications