”கார்கில் உயிர் தியாகம் கேவலாமாய் அரசியல் செய்வதற்கல்ல” அஸம் கான் பேச்சுக்கு எதிர்ப்பு
பெங்களூரு: சமாஜ்வாடி கட்சித்தலைவரான அஸம் கான் கார்கில் போர் குறித்துப் பேசிய கருத்தக்களால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
"முஸ்லிம் வீரர்கள்தான் 1999 இல் கார்கில் போரில் வெற்றியை பெற்றுத்தந்தனர்" என்று மீண்டும்,மீண்டும் கூறிவரும் அஸம் கானின் கூற்றுக்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த விவகாரத்திற்கு அஸம்கானின் சமாஜ்வாடிக் கட்சி பட்டும் படாமலும் பதிலளித்துள்ளது.
கட்சியின் ”முழுபூசணிக்காய்” கூற்று:
"கார்கில் போரின்போது மத, இன , மொழிகளைக் கடந்த அனைத்து வீரர்களும் ஒருங்கிணைந்து போரிட்டனர். அவர்கள் அனைவரும் இணைந்ததால் மட்டுமே இந்த வெற்றி கிட்டியது" என்று கூறியுள்ளார் அக்கட்சியின் சிவபால் சிங் யாதவ்.
உயிர்தியாக வீரர்கள்:
இந்த அதிருப்தி கருத்து தொடர்பாக நமது ஒன் -இந்தியா துணை ஆசிரியரான ரிச்சா பாஜ்பாய், கார்கில் போரில் உயிர்தியாகம் செய்த சுரப் காலியாவின் தந்தை டாக்டர் என்.கே.காலியா மற்றும் மற்றொரு வீரர் அஜய் அகுஜாவின் மனைவி ஆகியோரை சந்தித்து கானின் பேச்சு பற்றிய கருத்துக்களைக் கேட்டறிந்தார்.
சித்திரவதை மரணம்:
கேப்டன் காலியா கார்கில் போரின் போது சிறை பிடிக்கப்பட்டு மிகக் கொடுமையான முறையில் 22 நாட்களுக்கு சித்திரவதை செய்யப்பட்டார். காலியா மற்றும் அகுஜாவின் சிதைந்த உடல்கள் ஜூன் 9, 1999 அன்று இந்திய ராணுவத்தை வந்தடைந்தது.
சிகரெட் சூடு:
அவர்களுடைய உடற்கூறு ஆய்வில், அவர்கள் ஐவரும் மிக கொடுமையாக சிகரெட் சூடு, காதுகளில் இரும்பு ராடுகளால் தாக்குதல், கண்கள் பறிப்பு, பற்கள் உடைந்து போன நிலையில் மிக கொடுமையான மரணத்தை சந்தித்தது தெரிய வந்தது.
நீதி கிடைத்தபாடில்லை:
கிட்டத்தட்ட பல ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்னும் அவர்களுடைய உயிர்தியாகத்திற்கான நீதி கிடைக்கவில்லை.இந்திய அரசாங்கம் இக்கொடுமைகளை செய்த கொலைவெறியர்களை கண்டறிய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
போராடும் தந்தை:
கேப்டன் காலியாவின் தந்தை பல வகைகளில் தன்னுடைய மகனின் மரணத்திற்கான நியாயம் கிடைக்க போராடி வருகின்றார்.
பிள்ளைகளை இழந்த பெற்றோர்:
அவர் அஸம் கான் பேச்சு குறித்துக் கூறுகையில், "நான் மட்டும் இல்லாமல் பல பெற்றோர் தங்கள் குழந்தைகளை இந்த போரில் இழந்துள்ளனர்.கார்கில் போரை வைத்து மிகக் கேவலமாக அரசியல் செய்வதை தலைவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.எங்களுக்கு அரசியல்வாதிகள் ஏதெனும் செய்ய நினைத்தால் நீதி கிடைக்க உதவுங்கள்" என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
”பரம் வீர் சக்ரா” வீரர்:
விமானப் படை தளபதியான அஜய் அகுஜாவும் பாகிஸ்தானின் கொடுமையான தாக்குதலில் தன் இன்னுயிர் நீத்தவர் ஆவார்.அதே ஆண்டு ஆகஸ்டு 15 அன்று அவருக்கு "பரம் வீர் சக்ரா" விருது வழங்கப்பட்டது.ஆனால், அவருடைய இறப்பிற்கான நீதிதான் இன்னும் கிடைத்தபாடில்லை.
வலி தரும் பேச்சு:
அவருடைய மனைவியான அல்கா அகுஜா, "அஸம் கான் போன்ற அரசியல் வாதிகளின் இது போன்ற கூற்றுகள் மனதிற்கு மிக வலி தருகின்றது.இது முழுக்க முழுக்க தவறான கூற்று" என்று வலியுடன் கூறியுள்ளார்.
உயிர் தியாகம் செய்தவர்கள் “இந்தியர்கள்”:
முன்னாள் மேஜர் ககன்தீப் பாக்ஷி கூற்றுப்படி, 527 இந்திய வீரர்கள் கார்கில் போரில் உயிர் தியாகம் செய்துள்ளனர்.1336 வீரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாகுபாடுகள் இல்லை:
அஸம் கானின் கூற்றுக்கு எதிராக அவர் ,"அவர்கள் அனைவரும் இந்தியர்கள்.அதில் யாரும் முஸ்லில்,இந்து என்ற பாகுபாடுகள் கிடையாது. அஸம் கான் ஒருமுறை எங்கள் இடத்திற்கு வந்து வீரர்களின் செயல்பாடுகளை தெரிந்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.