வீதியில் அலைந்த ‘ஆக்ஸ்போர்டு’ தாத்தா... வைரல் பதிவு மூலம் வீடு தந்த பேஸ்புக்!
டெல்லியில் வீதியில் படுத்துறங்கி வந்த முதியவருக்கு பேஸ்புக் பதிவு மூலம் வீடு கிடைத்துள்ளது.
Recommended Video
டெல்லி: பேஸ்புக் பதிவின் மூலம் வீடற்று வீதியில் படுத்துறங்கி வந்த 76 வயது முதியவருக்கு தற்போது வீடு கிடைத்துள்ளது.
சமூகவலைதளங்களை நன்மைக்கும் பயன்படுத்தலாம், தீமைக்கும் பயன்படுத்தலாம் என்பதை நாம் இயற்கை பேரிடர் சமயங்களில் ஏற்கனவே அறிந்தவர்கள் தான். அந்தவகையில் முதியவர் ஒருவருக்கு வீடு கிடைக்க உதவி மீண்டும் தன் நல்ல முகத்தை நிரூபித்துள்ளது பேஸ்புக்.
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றவர் ராஜா சிங் (76). தமது அறுபது வயது வரை வெளிநாட்டில் வசித்து வந்த அவர், தமது சகோதரர் பி.எஸ்.புல்லின் வற்புறுத்தலால் இந்தியா திரும்பினார்.
சகோதரருடன் சேர்ந்து பல்வேறு தொழில்களை அவர் செய்து வந்தார். ஆனால் ராஜா சிங்கின் சகோதரர் புல், மது அருந்துவதை மட்டுமே முழு நேர தொழிலாக செய்து வந்தார். இதனால் தொழிலில் பெருட் நஷ்டம் ஏற்பட்டது. இருப்பினும் கடுமையாக உழைத்து, தமது இரு மகன்களையும் வெளிநாட்டில் படிக்க வைத்து, அங்கேயே அவர்களுக்கு வேலையும் வாங்கி தந்தார் ராஜா சிங்.
ஆனால் அவரின் இரண்டு மகன்களும் தற்போது அவரை கைவிட்டுவிட்டனர். வெளிநாட்டு பெண்களை திருமணம் செய்துகொண்டு, ஒரு மகன் அமெரிக்காவிலும், மற்றொரு மகன் இங்கிலாந்திலும் நிரந்தரமாக குடியேறிவிட்டனர்.
ஆனால் முதியவர் ராஜா சிங்கோ, தமுது மனைவி இறந்த பின்னர் டெல்லி தெருக்களில் தஞ்சம் அடைந்துவிட்டார். கடும் வறுமையிலும், பிறரிடம் யாசம் கேட்டு வாழ்வதை வெட்கக்கேடாக நினைத்த அந்த முதியவர் நேர்மையுடன் உழைத்து வாழ்வை தள்ளிக்கொண்டிருக்கிறார்.
டெல்லியின் கனாட் ப்ளேஸ் பகுதியில் உள்ள ஒரு பொதுக்கழிப்பிடத்தில் தினமும் காலை குளித்து, அனுமந்த் மந்திர் எனும் இடம் அருகே உள்ள தூதரக அலுவலகத்துக்கு சென்று, விசா கோரி அங்கு வருபவர்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய உதவுகிறார் இந்த தள்ளாத வயதிலும். பின்னர் ரயில் நிலையத்திலோ அல்லது தெருக்களின் நடைப்பாதைகளிலோ படுத்துரங்கி இரவு பொழுதை கழித்து வந்தார் அவர்.
பல நாட்களில் உணவுக்கு கூட வழியில்லாமல் கிடந்திருக்கிறார் ராஜா சிங். அப்போதும் கூட யாரிடமும் யாசம் கேட்டதில்லை அவர்.
இவரை பற்றிய செய்தியை முகநூலில் பதிவிட்டார் ஒருவர். அந்தப் பதிவு பலருக்கும் பரவி சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, முதியவர் ராஜா சிங்குக்கு உதவு பலத்தரப்பட்ட மக்கள் முன்வந்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் செய்தி பரவியதால், அவருக்கு தற்போது குருநாகக் சுக்சாலா எனும் தங்க இடம் கிடைத்துள்ளது. அவரை பலரும் தற்போது அங்கு வந்து பார்த்து செல்கின்றனர்.
குடியிருக்க இடம் கிடைத்துவிட்ட போதிலும்,. தமது வழக்கமான பணிகளை செய்ய தவறுவதில்லை ராஜா சிங். ஆட்டோக்காரர் ஒருவர் தமது ஆட்டோவில் தினமும் காலை ராஜா சிங்கை அழைத்துக்கொண்டு போய் தூதரக அலுவலம் முன் இறக்கிவிடுகிறார். அங்கு விசா விண்ணப்பிக்க வருபவர்களுக்கு உதவும் அவர், பின் மதியம் குருநாகக் சுக்சாலாவில் உள்ள தமது குடியிருப்புக்கு திரும்பிவிடுகிறார்.
இந்த வயதில் உழைத்து உண்ண வேண்டும் என்பதில் மிக உறுதியுடன் இருக்கிறார் அவர். ராஜா சிங்கின் மன உறுதியை அப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டுகின்றனர்.