"கோச்" தாக்கியதால் கேரளாவில் நீச்சல் வீராங்கனை தற்கொலை... விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு
ஆலப்புழா: கேரளாவில் தற்கொலைக்கு முயன்ற நான்கு விளையாட்டு வீராங்கனைகளில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குறித்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் சர்பானந்த சோனேவால் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள வாட்டர் ஸ்போர்ட்ஸ் செண்டரில் தங்கி மாணவிகள் பலர் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். அங்குள்ள ஹாஸ்டலில் நேற்று மாலை 4 மாணவிகள் மயக்க நிலையில் மீட்கப் பட்டனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப் பட்டனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், அம்மாணவிகள் விஷக்காய்களை சாப்பிட்டதைக் கண்டு பிடித்தனர்.
மருத்துவமனையில் சேர்க்கப் பட்டவர்களில் ஒரு வீராங்கனை சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 வீராங்கனைகளும் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவருக்கு மட்டும் சுயநினைவு வந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் அளித்த வாக்குமூலத்தில் பயிற்சியாளர் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தியதே தற்கொலை முயற்சிக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
மேலும், சம்பவம் நடந்ததற்கு சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த மாணவியைப் பயிற்சியாளர் துடுப்பால் தாக்கியதாகவும், அது தொடர்பாக அம்மாணவி அளித்த புகாரின் பேரில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அம்மாணவியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப் படும் வரை, உயிரிழந்த மாணவியின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்யப் போவதில்லை என்றும் கூறி மருத்துவமனை பகுதியிலேயே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தகவலறிந்த மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் சர்பானந்த சோனேவால் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். விசாரணைக்குப் பின் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப் படுவார்கள் என அவர் உறுதியளித்துள்ளார்.
ஆனால், மாணவிகளின் குற்றச்சாட்டை கேரள வாட்டர் ஸ்போர்ட்ஸ் மையம் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அஸ்வினி நாச்சப்பா இரங்கல்:
இது தொடர்பாக சர்வதேச அளவில் சாதனைகள் புரிந்த தடகள வீராங்கனை அஸ்வினி நாச்சப்பா கூறுகையில், ‘இந்தச் சம்பவம் எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. நாங்கள் பல மாதங்கள் இந்த மையத்தில் தங்கியுள்ளோம். ஆனால் இது போன்ற சம்பவம் நடந்ததில்லை. உயிரிழந்த மாணவியின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்' என்றார்.