சாக்கடைகளில் பலியான துப்புரவு பணியாளர்களுக்கு ரூ 10 லட்சம் இழப்பீடு: உச்ச நீதிமன்றம்
டெல்லி: மனித கழிவை மனிதர்களே அகற்றும் அவலத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கடந்த 1993ம் ஆண்டிலிருந்து பாதாள சாக்கடைகள் மற்றும் கழிவு நீர்த் தொட்டிகளில் விழுந்து பலியான தொழிலாளர்கள் குடும்பங்களைக் கண்டறிந்து அவற்றிற்கு தலா ரூ 10 லட்சம் இழப்பீடு வழங்கவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
சமீபத்தில் கழிவு நீர்த் தொட்டியை சுத்தீரிக்கும் பணியில் ஈடுபட்ட போது ஏழு தொழிலாளர்கள் பரிதாபமாக விஷவாயு தாக்கிப் பலியானார்கள். அவ்வப்போது நடைபெறும் இது போன்ற சம்பவங்களால் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினர் நிர்கதியாகின்றனர். மேலும், விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் அயல் கிரகங்கங்களில் குடியேறும் முயற்சிகளில் உலக நாடுகள் ஈடுபட்டு வரும் நிலையிலும், இன்னமும் மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் பரிதாப நிலையில் தான் சில துப்புரவு தொழிலாளர்கள் உள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பாக துப்புரவு தொழிலாளர்கள் இயக்கம் மத்திய அரசுக்கு எதிராக பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்தது. இந்த வழக்கின் மீதான விசாரணை முடிவடைந்ததை யடுத்து நேற்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.சதாசிவம் மற்றும் நீதிபதிகள் ரஞ்ஜன் கோகோய், என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மறுவாழ்வுச் சட்டம்...
துப்புரவு தொழிலாளர்களின் நலன் பேணும் வகையில் இயற்றப்பட்ட மனித கழிவை மனிதனே அகற்றும் தொழில் தடுப்பு மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013-ல் வரையறுக்கப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளையும் மத்திய, மாநில அரசுகள் கடைபிடிக்க வேண்டும். அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து பிரிவுகளும் கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும்.
கல்வி உதவித்தொகை...
துப்புரவு தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு அனைத்து கல்வி உதவித்தொகைகளும் வழங்கப்பட வேண்டும். துப்புரவு தொழிலாளர்களுக்கு நிலம் மற்றும் வீடு கட்ட உதவித் தொகை வழங்க வேண்டும். அல்லது உதவித்தொகையுடன் வீடு வழங்க வேண்டும்.
மானியத்துடன் கூடிய கடன்...
துப்புரவு தொழிலாளியின் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி அளிக்கப்பட வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு மாற்று தொழில் செய்வதற்கான மானியம் மற்றும் கடன்தொகை வழங்க வேண்டும்.
குற்றம்...
எந்தவிதமான நெருக்கடியான நிலையிலும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி பாதாள சாக்கடையில் இறங்குவது குற்றமாக அறிவிக்கப்பட வேண்டும்.
ரூ.10 லட்சம் நஷ்டஈடு...
பாதாள சாக்கடை விபத்துகளில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடாக வழங்க வேண்டும்.
கவுரவமான வாழ்க்கைக்கு ஆதரவு...
ரயில் தண்டவாளங்களில் கழிவு அள்ளுவதை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் ஒரு கால வரையறைக்குள் ஒரு செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும். துப்புரவு தொழிலாளர்கள் கவுரவமான முறையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள அனைத்து ஆதரவையும் அளிக்க வேண்டும்.
பலியான துப்புரவு தொழிலாளர்கள்...
1993ம் ஆண்டில் இருந்து பாதாள சாக்கடைகள் மற்றும் கழிவுத்1தொட்டிகளில் இறந்துபோன தொழிலாளிகளின் குடும்பங்களைக் கண்டறிந்து ஒவ்வொரு மரணத்துக்கும் ரூ.10 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.
கடுமையான
மேற்கண்ட உத்தரவை செயல்படுத்தும் பொறுப்பை அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் அளிக்கப்படுகிறது. அப்படி செயல்படுத்த தவறுகிறவர்கள் மீது மாநில அரசும் மத்திய அரசும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றத்தை அணுகலாம்' என இவ்வாறு அத்தீர்ப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.