அரசியல்வாதிகளின் சொத்து மட்டும் ராக்கெட் வேகத்தில் உயர்வது எப்படி?.. சுப்ரீம் கோர்ட் 'நறுக்' கேள்வி
டெல்லி : தேர்தல் வெற்றிக்குப் பின்னர் அரசியல்வாதிகளின் சொத்து அதிகரிப்பது குறித்து மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தன்னார்வ நிறுவனம் ஒன்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த வழக்கில் அரசியல்வாதிகளின் சொத்துகள் தேர்தலில் வெற்றி பெற்ற பின் எப்படி அதிகரிக்கிறது என்று கேட்கப்பட்டிருந்தது. மேலும் தேர்தலில் போட்டியிடும் நபர் மட்டுமின்றி அவரின் மனைவி, மகன் மற்றும் உறவினர்களின் சொத்து விவரங்களையும் வெளியிட உத்தரவிடவும் மனுவில் கோரிக்கை விடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஷ்வர் அமர்வு அரசியல்வாதிகளின் சொத்து விவரம் குறித்து மத்திய அரசுக்கு சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது. வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் சொத்து விவரங்கள், அவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் விவரங்களோடு ஒப்பிட்டு பார்க்கப்படுகின்றனவா என கேட்டுள்ளனர்.
என்ன நடவடிக்கை?
தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து மத்திய அரசு முயற்சிகள் எடுத்து வருவதாகச் சொல்கிறது, ஆனால் அது எப்போது அதற்காக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது என்று எந்தத் தகவலும் இல்லை. "இது தான் அரசின் செயல்பாடா? இது வரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் அமர்வு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி எஸ் நரசிம்மாவை கேட்டுள்ளனர்.
ஏன் காலதாமதம்?
தேர்தல் சீர்திருத்தத்திற்கு தயாராக இருப்பதாக சொல்கிறீர்கள், ஆனால் வேட்பாளர்கள் குறித்த அடிப்படைத் தகவல்களைக் கூறவே ஏன் இப்படி காலதாமதம் செய்யப்படுகிறது, கண்டிப்பாக செவ்வாய்க்கிழமை காலைக்குள் இந்தத் தகவல்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி கூறினார்.
முக்கியமான பிரச்னை
இதற்கு பதிலளித்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நரசிம்மா, அரசு இது போன்ற விஷயங்களில் ஏதோ ஆவணங்களை தாக்கல் செய்யக் கூடாது என்பதில் கவனமாக இருப்பதாகக் கூறினார். மேலும் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்றும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் கோரிக்கை
பொதுநல வழக்கில் ஆஜரான தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர் தேர்தலில் பணத்தின் சக்தி அதிகரித்துவிட்டதாகவும், இதனை கட்டுப்படுத்த வேட்பாளர்கள் சொத்துகளை சேர்த்தற்கான ஆதாரத்தையும் சேர்த்து தாக்கல் செய்ய உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டனர். இதே போன்று அவரது மனைவி மற்றும், வாரிசுகள் உள்பட வேட்பாளரைச் சார்ந்துள்ளவர்கள் அனைவரின் விவரத்தையும் சேர்த்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கோரினார்.