அனைவருக்கும் வைர நெக்லஸ்.. மகளிர் கிரிக்கெட் அணிக்கு கிப்ட் கொடுக்கும் பாஜக எம்பி.. யார் இவர்?
காந்தி நகர்: 50 ஓவர் மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி முதல் முறையாக இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதனால் மகளிர் அணிக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகிறது. இந்நிலையில் தான் குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த வைர தொழிலதிபரும், பாஜகவின் ராஜ்யசபா எம்பியுமான ஒருவர் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணியின் அனைவருக்கும் வைர நெக்லஸ் பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளார். அவர் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
மகளிருக்கான 50 ஓவர் உலககோப்பை போட்டியில் இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று கோப்பையை வென்றது. நீண்ட ஆண்டுகளாக உலககோப்பை மிஸ் ஆகி வந்த நிலையில் தற்போது அது நம் கைக்கு கிடைத்துள்ளது.

நவி மும்பை கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இறுதி போட்டியில் தென்ஆப்பிரிக்காவின் மகளிர் கிரிக்கெட் அணியை வீழ்த்தி இந்திய மகளி்ர் உலககோப்பையை வென்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பைனலில் இந்திய மகளிர் அணி முதலில் பேட் செய்து 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 298 ரன்கள் குவித்தது.
அடுத்து ஆடிய தென்ஆப்பிரிக்கா அணி 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் இந்திய மகளிர் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வென்று உலககோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும், பரிசுகளும் குவிந்து வருகிறது. அந்த வகையில் குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபரும், ராஜ்யசபா எம்பியுமான கோவிந்த் டோலகியா இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு தனிப்பட்ட முறையில் பரிசு அறிவித்துள்ளார். இவர் வைரம் சார்ந்த தொழிலை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் தான் அவர் உலககோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு வைர நெக்லஸ் பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளார். அதேபோல் அனைவருக்கும் சோலார் பேனல்கள் வழங்குவதாக அறிவித்துள்ளார். முன்னதாக இதுபற்றி அவர் பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லாவிற்கு கடிதம் எழுதி உள்ளார்.
அதில், ‛‛உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய மகளிர் அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மகளிர் அணி உலகக்கோப்பை பைனலில் வென்று கோப்பையை கைப்பற்றினால் அணியில் உள்ள அனைவருக்கு வைர நெக்லஸ் வழங்குவேன். அதேபோல் அவர்களின் வீடுகளுக்கு சோலார் பேனல்கள் அமைத்து கொடுப்பேன்'' என்று கூறியிருந்தார்.
தற்போது மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றதால் கோவிந்த் டோலகியோ மகளிர் அணி வீராங்கனைகளுக்கு வைர நெக்லஸ் மற்றும் அவர்களின் வீடுகளுக்கு சோலார் பேனல்கள் அமைத்து கொடுக்க உள்ளார்
மகளிர் கிரிக்கெட் அணிக்கு வைர நெக்லஸை பரிசாக அறிவித்துள்ள கோவிந்த் டோலக்கியா பாஜகவை சேர்ந்தவர். பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு நெருக்கமானவர். இதனால் தான் கடந்த 2024ம் ஆண்டில் குஜராத்தில் இருந்து கோவிந்த் டோலக்கியா பாஜக சார்பில் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த கோவிந்த் டோலக்கியா குஜராத்தின் வைர தொழிலதிபர்களில் மிகவும் முக்கியமானவர்களில் ஒருவர் ஆவார். இவர் ஸ்ரீ ராம்கிருஷ்ணா எக்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் வைர ஏற்றுமதி தொழிலை மேற்கொண்டு வருகிறார்.
இவர் இதற்கு முன்பும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நன்கொடைகளை வழங்கி உள்ளார். குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் கடந்த 2021ம் ஆண்டில் ரூ.11 கோடியை அவர் அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கு நன்கொடையாக வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications