சூதாட்டம்: டோனி உள்ளிட்டோரைக் காப்பாற்ற முயல்கிறது தமிழக போலீஸ் - சம்பத் குமார் குற்றச்சாட்டு
டெல்லி: ஐபிஎல் சூதாட்ட வழக்கை விசாரிக்க ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமிக்க வேண்டும் என உச்சநீதின்றத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார் சஸ்பென்ட் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி ஜி சம்பத் குமார்.
ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் குறித்து முதல் கட்ட விசாரணை மேற்கொண்டவர் க்யூ பிரிவு அதிகாரி சம்பத்குமார்.
கிரிக்கெட் சூதாட்டம் குறித்த வழக்கு விசாரணையின் போது இவர் தலைமையிலான போலீசார் புரசைவாக்கத்தைச் சேர்ந்த ரங்கா என்ற சூதாட்ட புக்கியைப் பிடித்தனர். அவரிடமிருந்து பல லட்சம் ரூபாயைக் கைப்பற்றினர். ஆனால் இந்தத் தகவல்களை உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் மறைத்துவிட்டார் என்று சம்பத்குமார் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இடைப்பட்ட நேரத்தில் குற்றவாளிகளை மிரட்டி, அவர்கள் மீது சூதாட்ட வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க சென்னையில் உள்ள தனது நண்பர்கள் 3 பேர் மூலம் 1.15 கோடி லஞ்சமாக சம்பத்குமார் பெற்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், கிரிக்கெட் சூதாட்ட மோசடி வழக்கு, க்யூ பிரிவிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சம்பத்குமாரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
சஸ்பென்ட்
க்யூ பிரிவில் இருந்து திருச்சி ரயில்வே எஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டார் சம்பத்குமார். இந்தநிலையில், ஐபிஎல் மோசடி குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட நீதிபதி முட்கல் கமிட்டி முன்பு, சில போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் மோசடியில் பங்கு இருப்பதாக சம்பத்குமார் தெரிவித்தார். கேப்டன் தோனி மீது நேரடியாக அவர் குற்றம்சாட்ட, உடனே ரூ 100 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடருவேன் என்றார் தோனி.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், சம்பத்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த வழக்கில் பெருந்தலைகள் சிக்கிக் கொள்ளாமல் தடுப்பதற்காகவே தன்னை சஸ்பென்ட் செய்திருப்பதாக சம்பத்குமார் குற்றம்சாட்டினார்.
புதிய குற்றச்சாட்டு
இப்போது உச்ச நீதிமன்றத்தில் சம்பத்குமார் நேற்று தாக்கல் செய்த மனுவில், "ஐபிஎல் சூதாட்ட வழக்கு விசாரணையை முடக்குவதற்கு பல வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் சம்பந்தப்பட்டுள்ள பிரபலங்களை காப்பாற்றும் முயற்சியில் தமிழக சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டு செயல்படுகின்றனர். எனது விசாரணையின்போது முக்கிய ஆதாரங்கள் கிடைக்கும் நேரத்தில் சஸ்பென்ட் செய்யப்பட்டேன்.
குறிப்பாக உத்தம் ஜெயின் என்கிற புக்கி இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோணியின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கு குறித்த முட்கல் கமிட்டி அறிக்கையில், கமிட்டியின் உறுப்பினர்களில் ஒருவரான நிலே தத்தா, 'சூதாட்ட வழக்கில் சென்னை அணியைச் சேர்ந்தவர்களைக் காப்பாற்ற வேண்டுமென்றே சிலர் முயற்சி எடுப்பதாக நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளதையும் உச்சநீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
27.4.2013-ல் முடிந்த ஸ்பாட் பிக்சிங் டீல் ஒன்றில் சென்னை அணியின் குருநாத் மெய்யப்பன், ஹோட்டல் அதிபர் விக்ரம் அகர்வால் மற்றும் 'முக்கிய இந்திய வீரர்' ஆகியோருக்கு நேரடித் தொடர்பிருப்பதாக முட்கல் கமிட்டி அறிக்கையில் தத்தா குறிப்பிட்டுள்ளதையும் கவனிக்க வேண்டும்.
எனவே இந்த வழக்கு குறித்து விசாரிக்க தனி குழுவை நியமிக்க வேண்டும்' என்று கோரியுள்ளார்.
சம்பத்குமாரின் இந்த மனு மீதான விசாரணை ஏப். 16ம் தேதி நடைபெற உள்ளது.