காஷ்மீரில் ராணுவ தளபதி மீது வழக்கு விவகாரம்.. நிர்மலா சீதாராமன் மவுனம் கலைக்க சு.சுவாமி கெடு
சோபியான் விவகாரம் குறித்து நிர்மலா சீதாராமன் மவுனம் கலைக்க சுப்பிரமணியன் சுவாம் கெடு விதித்துள்ளது.
டெல்லி: ஜம்மு காஷ்மீரின் சோபியான் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ராணுவ தளபதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மவுனமாக இருப்பது ஏன் என பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் சனிக்கிழமையன்று ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 3 பேர் பலியாகினர்.
இச்சம்பவத்தையடுத்து ராணுவ தளபதி ஒருவர் உட்பட பாதுகாப்பு படையினர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பாரதிய ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்த பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது: சோபியான் விவகாரத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மவுனமாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
ராணுவ தளபதி ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்தது சரி என்கிறாரா? இது கட்சியின் கொள்கைகளுக்கும் மக்களின் தேசப்பற்றுக்கும் எதிரானது. இந்த விவகாரம் தொடர்பாக தன்னுடைய நிலைப்பாட்டை பிப்ரவரி 2-ந் தேதிக்குள் நிர்மலா சீதாராமன் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் கிளப்புவேன். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.