தான்சானிய மாணவியின் ஆடையை களைந்து அடித்து உதைத்த கொடூரம்: கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு
பெங்களூரு: பெங்களூரூவில், ஆப்பிரிக்க நாடான தான்சானிய மாணவி ஒருவரின் ஆடைகளை களைந்து தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூரிவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்த விபத்து ஒன்றில் 35 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து இறந்து போன பெண்ணின் உறவினர்கள், விபத்து ஏற்படுத்தியதாக நினைத்து கார் ஒன்றை வழி மறித்து தாக்குதல் நடத்தினர். அப்போது அவர்கள் அந்த காரில் இருந்த தான்சானிய நாட்டைச் சேர்ந்த 21 வயது மாணவி ஒருவரை கீழே இழுத்து அடித்து உதைத்தனர். மேலும், அவரது ஆடைகளையும் களைந்ததாக கூறப்படுகிறது.
அந்த வழியாக வந்த பேருந்தில் ஏறி தப்பிக்க முயன்ற மாணவியை துரத்திச் சென்ற அந்த கொடூர கும்பல், மாணவியை கீழே இழுத்துப் போட்டு உதைத்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் இளநிலை வர்த்தக மேலாண்மை (பிபிஎம்) படித்து வருகிறார்.
தான்சானியா நாட்டைச் சேர்ந்த மாணவி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இச்சம்பவம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக மிகவும் வேதனைப்படுவதாகவும் கூறியுள்ளார். மேலும் கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தாரமையாவைத் தொடர்பு கொண்ட அவர், தான்சானிய மாணவியை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே இச்சம்பவம் குறித்து தான்சானிய மாணவி நேற்று காவல்நிலையத்தில் புகார் செய்தார். இந்நிலையில் தான்சானியா தூதரகம் இந்திய அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இந்தியாவில் பயிலும் தான்சானிய மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் வலியுறுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துரையினர் 4 பேரை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.