ஒரே நாளில் 84 லட்சம் குடும்பங்களில் கணக்கெடுப்பு பணி: தெலுங்கானா ஸ்தம்பித்தது
ஹைதராபாத்: தீவிர குடும்ப உறுப்பினர்கள் கணக்கெடுப்பு பணியால் ஹைதராபாத் உட்பட தெலுங்கானா மாநிலமே இன்று ஸ்தம்பித்து போயுள்ளது.
புதிதாக உதயமாகியுள்ள தெலங்கானாவில் "தீவிர குடும்ப உறுப்பினர்கள் கணக்கெடுப்பு" பணி ஆகஸ்ட் 19ம் தேதி நடைபெறும் என்று அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் அறிவித்தார். இந்த கணக்கெடுப்பின்போது பெயர் பதிவு செய்தால் மட்டுமே அரசின் பல்வேறு சலுகைகளை பெற முடியும் என்பதால், வெவ்வேறு மாநிலங்களில் உள்ள தெலங்கானா மக்கள், சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர்.

சலுகைகள் கிடைக்கும்
கணக்கெடுப்பில் பெயர்களை பதிவு செய்துகொள்பவர்களுக்கு மட்டுமே, எதிர்காலத்தில் மாநில அரசு செயல்படுத்தவுள்ள மானியங்கள், ரேஷன், மருத்துவ காப்பீடு, ஓய்வூதியம், கட்டண சலுகைகள் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும் என்று சந்திரசேகர ராவ் அறிவித்தார்.

பஸ், ரயில்களில் கூட்டம்
இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, வெளி மாநிலங்களில் பணிபுரியும், தற்போது வசித்து வரும் லட்சக்கணக்கான தெலங்கானா மக்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்களில் லட்சக்கணக்கான தெலங்கானாவினர் உள்ளனர். மும்பை நகரில் மட்டும் சுமார் 8 லட்சம் பேர் வசிக்கின்றனர். அவர்கள் அனைவரும் தெலங்கானாவை நோக்கி படையெடுத்ததால் கடந்த இரு தினங்களாக தெலுங்கானா மாநிலத்துக்கு பிற மாநிலங்களில் இருந்து செல்லும் பஸ், ரயில்களில் கூட்டம் அலைமோதியது.

அரசு விடுமுறை
தெலுங்கானா முழுவதும் இப்போது மக்கள் நெருக்கமாகத்தான் உள்ளது. கணக்கெடுப்பை முன்னிட்டு இன்று அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பஸ்கள் ஓடவில்லை, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் இயங்கவில்லை. எனவே தெலுங்கானா மாநிலம் முழுக்க ஸ்தம்பித்துள்ளது.

4 லட்சம் ஊழியர்கள்
தெலுங்கானாவில் 84 லட்சம் குடும்பங்கள் உள்ளன. இந்த குடும்பங்களில் கணக்கெடுக்க நான்கு லட்சம் அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர்கள் மட்டுமின்றி, போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சேகரிக்கப்படும் தகவல்கள்
ணக்கெடுப்பின்போது, ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒருவரோ அல்லது இருவரோ தன்னுடைய வீட்டில் இருக்க வேண்டும். தங்களது குடும்பத்தின் மற்ற நபர்கள் குறித்த ஆவணங்களை அளித்து, அவர்களது பெயரையும் பதிவு செய்து கொள்ளலாம். குடிநீர் இணைப்பு, சொத்து வரி, காஸ் மற்றும் மின்சார இணைப்பு, வங்கி கணக்கு, ஆதார் அட்டை, ஜாதி சான்று, பிறப்பு சான்று, வாகனங்கள் குறித்த தகவல் உள்ளிட்டவை சேகரிக்கப்படும்.
இந்த கணக்கெடுப்பு மூலமாக ஆந்திர மக்களை இனம் கண்டு அவர்களை ஒடுக்க சதி நடப்பதாகவும் சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications