சீமாந்திராவில் அமைதி... விஜயவாடாவில் 'கரண்ட்' இல்லை.. விஜயநகரத்தில் ஊரடங்கு
விஜயவாடா: 2 நாள் வன்முறை தலை தூக்கி பெரும் பரபரப்பாக இருந்த நிலையில் சீமாந்திராவில் இன்று சற்று அமைதி நிலவி வருகிறது.
ராயலசீமா, கடலோர ஆந்திரா ஆகியவை அடங்கிய சீமாந்திராவின் 13 மாவட்டங்களிலும் இன்று பெரிய அளவில் வன்முறைச் சம்பவங்கள் நடக்கவில்லை. மாறாக கடைகள் அடைக்கபட்டிருந்தன. பெரிய அளவிலான போராட்டங்களும் இன்று நடைபெறவில்லை.
இருப்பினும் விஜயவாடாவில் உள்ள 7 மின் உற்பத்தி நிலையங்களில் ஆறு நிலையங்களில் மின் விநியோகம் சீரடையவில்லை. இதனால் விஜயவாடாவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு மின்துறை ஊழியர்கள் தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இவர்கள் 48 மணி நேர வேலைநிறுத்தத்தை அறிவித்திருந்தனர். ஆனால் தற்போது இதை காலவரையற்ற வேலைநிறுத்தமாக அறிவித்துள்ளனர். இதனால் விஜயவாடாவில் மின் விநியோகம் ஸ்தம்பித்துள்ளது.
மின்சாரம் இல்லாததால் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆந்திராவுக்கு ஒரு நாளைக்கு 5000 மெகாவாட் மின்சாரம் தேவை. அதில், விஜயவாடாவில் மட்டும் ஒரு நாளைக்கு 1700 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உற்பத்தி தற்போது அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
விஜயநகரத்தில் ஊரடங்கு
இதற்கிடையே, கடலோர ஆந்திராவில் உள்ள விஜயநகரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளு. அங்கு தெலுங்கானா எதிர்ப்பாளர்கள் மிகப் பெரிய அளவில் வன்முறையில் ஈடுபட்டதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வரக் கூடாது என்று காவல்துறை எச்சரித்துள்ளது.
இங்கு ஒரு வங்கி தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. பல வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன. இதையடுத்து நேற்று இரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.