சாமியார் ராம் ரஹீம் மருத்துவமனையில் சரமாரியாக சட்ட விரோத கருக்கலைப்புகள்.. அதிர்ச்சியில் அதிகாரிகள்
சண்டிகர்: சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் மருத்துவமனையில் சட்டவிரோதமான வகையில் கருக்கலைப்புகள் நடத்தப்பட்டுள்ளதா என விசாரிக்க ஹரியானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாலியல் வன்முறை வழக்கில் சிறையிலடைக்கப்பட்டுள்ள குர்மீத் ராம் ரஹிம்சிங்கின் தேர சச்சா அமைப்புக்குச் சொந்தமான மருத்துவமனை ஹரியான மாநிலம் சிர்ஸாவில் உள்ளது.
தேரா சச்சா அமைப்பு தொடர்பான இடங்களில், சோதனைகளை நடத்திய காவல்துறையினர், சிர்சாவில் உள்ள மருத்துவனையிலும் சோதனைகளை மேற்கொண்டனர்.

திடுக்கிடும் தகவல்
அப்போது, அங்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கி இருப்பதாக சோதனையிட்ட அதிகாரிகள் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளனர்.

சிக்கலில் ராம் ரஹீம்
இதேபோல ஆவணங்கள் ஏதுமின்றி பல சடலங்களும், ஆசிரமத்திற்குள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ராம் ரஹீம் மீதான சட்டத்தின் பிடி மேலும் இறுகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விதிமுறை மீறல்கள்
சிர்சா துணை கமிஷனர் பிரப்ஜோத் சிங் கூறுகையில், "கர்ப்பகால சட்டத்தின்கீழ், உரிய மருத்துவ முறையில், கருக்கலைப்பு நடைபெறவில்லை. பல விதிமுறை மீறல்கள் தெரியவந்துள்ளது. விசாரணை தொடர்ந்து வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

ரிப்போர்ட்டுகளால் அம்பலம்
விசாரணை அதிகாரி ஒருவர் கூறுகையில், "சில கருக்கலைப்புகள் குறித்த அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ரிப்போர்டுகள் கிடைக்கவில்லை. ஒரு சம்பவத்தில், கரு நன்கு வளரவில்லை எந்று காரணம் கூறி கருக்கலைப்பு நடந்துள்ளது. ஆனால் அதே கரு நன்றாக இருந்ததாகத்தான், முந்தைய ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன" என்று தெரிவித்தார்.

உத்தரவு
இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்த ஹரியானா அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனை டாக்டர்கள், நிர்வாகிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப ஹரியானா அரசு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications