"ஜன. 26ல் தாக்குதல் நடைபெறும்".. 16 ராஜஸ்தான் அமைச்சர்களுக்கு இமெயில் மூலம் தீவிரவாதிகள் மிரட்டல்!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானைச் சேர்ந்த 16 அமைச்சர்களுக்கு இமெயில் மூலம் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். ஜனவரி 26ம் தேதி தாக்குதல் நடத்தப்படும் என்று அதில் மிரட்டப்பட்டுள்ளது.
2 நாட்களுக்கு முன்புதான் இந்திய உளவு அமைப்பான ஐபி மற்றும் அமெரிக்காவின் சிஐஏ ஆகியவை இந்தியாவில் குடியரசு தினத்தன்று தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் ராஜஸ்தான் அமைச்சர்கள் 16 பேருக்கு மிரட்டல் விடுத்து மெயில் வந்துள்ளது.
இதுகுறித்து உள்ளூர் போலீஸாரும், உளவுத்துறையினரும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த மெயிலில் உள்ள தகவல்களும், இந்திய, அமெரிக்க உளவு அமைப்புகளும் வெளியிட்ட தகவல்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக உள்ளன. ராஜஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்யும் அமெரிக்கர்கள் மிகுந்த கவனத்துட் இருக்குமாறும், அவர்கள் அங்கு குறி வைக்கப்படலாம் என்றும் சிஐஏ எச்சரித்திருந்தது. எனவே ராஜஸ்தான் அமைச்சர்களுக்கு வந்துள்ள மிரட்டல் மெயில்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
மேலும் ஜனவரி 26ம் தேதி அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவில் குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருகிறார். எனவே ஒவ்வொரு மிரட்டலையும் பாதுகாப்புப் படையினரும், உளவுத்துறையினரும் சாதாரணமாக எடுத்துக் கொள்வதில்லை.
இந்த மெயில் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்ற விசாரணை தொடங்கியுள்ளது. இது தீவிரவாதிகள் அனுப்பியதா அல்லது யாருடையாவது விஷமனத்தனமான செயலா என்று தெரியவில்லை.
இருப்பினும் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்று போலீஸார் கூறியுள்ளனர்.
தீவிரவாதிகள் ஏற்கனவே ஒருமுறை ஜெய்ப்பூரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்துள்ளது. இந்தியன் முஜாஹீதீன் அமைப்பினர் நடத்திய இந்த வெடிகுண்டுத் தாக்குதலில் பலர் உயிரிழந்தனர். மேலும் அந்த அமைப்பைச் சேர்ந்த முக்கியப் புள்ளியான தெசின் அக்தர் மற்றும் அவனது கூட்டாளிகளைப் பிடிக்க போலீஸார் அலர்ட் விடுத்தனர். இதில் இருவரும் சிக்கினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஜெய்ப்பூரில் அரண்மனைகள் உள்ளிட்ட இடங்களைத் தாக்கித் தகர்க்கும் திட்டம் இருந்தது தெரிய வந்தது.
மேலும் சமீபத்தில் ராஜஸ்தானிலிருந்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு அன்சர் உல் தவாஹித் என்ற அமைப்பு ஆள் பிடித்து அனுப்புவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த இமெயில் மிரட்டல்கள் குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.