1962-இல் சீனப் போரில் இந்தியாதான் வென்றதாம்... சொல்கிறது ம.பி. பாடப்புத்தகம்!
கடந்த 1962-ஆம் ஆண்டில் இந்தியா- சீனா இடையிலான போரில் இந்தியா வெற்றி பெற்றதாக மத்தியப் பிரதேச மாநில பாடப்புத்தகத்தில் தவறான தகவல் இடம்பெற்றுள்ளது.
போபால்: பிரதமராக ஜவாஹர்லால் நேரு இருந்தபோது 1962-இல் இந்தியா- சீனா இடையேயான போரில் இந்தியாதான் வெற்றி பெற்றது என்று மத்தியப் பிரதேசத்தின் பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டது.
இந்தியா- பூடான்- திபெத் ஆகிய மூன்று நாடுகளின் சந்திப்பில் உள்ள டோக்லாம் பீடபூமியில் சாலை அமைக்கும் பணியை சீனா கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது. இதை இந்தியா தடுத்து நிறுத்தியதால் தற்போது எல்லையில் இரு நாட்டு ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் பதற்றம் நிலவி வருகிறது.
சீன நாளிதழ்களும் இந்தியாவை சீண்டும் நோக்கத்தில் செய்தி வெளியிட்டு வருகின்றன. மேலும் 1962-இல் நடந்த போரில் இந்தியாவுக்கு சீனாவால் ஏற்பட்ட விளைவுகளை நினைத்து இந்திய படைகளை திரும்ப பெற வேண்டும் என்று சீனா பூச்சாண்டி காட்டுகிறது.
இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 8-ஆம் வகுப்புக்கான சம்ஸ்கிருத பாடப் புத்தகத்தில் 1962-ஆம் ஆண்டு சீனாவுடன் நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த புத்தகத்தில் இந்தியா மீது சீனா படையெடுத்தபோது பிரதமராக இருந்த ஜவாஹர்லால் நேரு இந்திய படைகளையும், அவர்களின் மன உறுதியையும் எப்படி தயார்படுத்தினார் என்பது குறித்தும் அவரது முயற்சிகளால் 1962-இல் சீனா படையெடுத்த போது இந்தியா திறமையாக வெற்றி கண்டுள்ளதாகவும் இடம்பெற்றுள்ளது.
இந்தப் புத்தகத்தை பேராசிரியர் உமேஷ் பிரசாத் ராஸ்தோகி மற்றும் இலக்கண நிபுணர் சோம்தத் சுக்லா உள்பட 5 பேர் எழுதியுள்ளனர்.