பெங்களூரின் பிரபல டெக்பார்க் நிறுவனம் ஜப்தி.. மாநகராட்சி நடவடிக்கையால் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் ஷாக்
பெங்களூர்: வரி பாக்கி வைத்துள்ள பெங்களூருவில் உள்ள பிரபல டெக்பார்க் நிறுவனத்தில் மாநகராட்சி அதிகாரிகள் ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட்டதால் அங்கு பணி புரியும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் அதிர்ச்சியைடந்தனர்.
வடக்கு பெங்களூரின், ஹெப்பால் பகுதி அருகே 424 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாய் அமைந்துள்ளது மான்யதா டெக் பார்க்.

இந்த கட்டிடத்தில் அமைந்துள்ள சாப்ட்வேர் நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான சாப்ட்வேர் இன்ஜினியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த கட்டுமான நிறுவனம், 2008-09 முதல் சொத்துவரி கட்டுவதில் மோசடி செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு சதுர அடிக்கு ரூ.10 சொத்து வரியாக செலுத்த வேண்டிய நிலையில் ரூ.8 மட்டுமே செலுத்தப்பட்டு வந்துள்ளது.
அசல் தொகை ரூ.83.45 கோடி மட்டுமே. ஆனால், வட்டி தொகையோடு சேர்த்து தற்போது மான்யதா டெக் பார்க் கட்ட வேண்டிய பணம் எவ்வளவு தெரியுமா? ரூ.273.95 கோடி. இந்த தொகையை மாநகராட்சிக்கு 3 நாட்களுக்குள் வழங்குமாறு சில தினங்கள் முன்பு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால், தொகையை மான்யதா டெக்பார்க் கட்டாத நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் இன்று மான்யதா டெக் பார்க் உள்ளே சென்று பொருட்களை ஜப்தி செய்தனர். இதனால் சாப்ட்வேர் ஊழியர்கள் அதிர்ச்சியைடந்தனர்.
சட்டப்படி, வரி பாக்கியை கட்ட நடவடிக்கை எடுப்பதாக மான்யதா பிரமோட்டர் நிறுவன மேலாண் இயக்குநரும், சேர்மனுமான ரெட்டி வீரண்ணா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications