எஜமானரின் கொலை வழக்கு.. 2 ஆண்டுகளுக்கு பின் துப்பு துலக்கிய செல்ல நாய்.. போலீஸே வியந்த மாஸ் சம்பவம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கொலை வழக்கு ஒன்றை கண்டுபிடிக்க கொலை செய்யப்பட்ட நபர் வளர்த்த நாய் உதவி செய்திருப்பது பேசுபொருளாகியுள்ளது. கொலை செய்யப்பட்ட நபரின் நாய் தன்னுடைய இறப்பு மூலம் இந்த உண்மையை வெளி கொண்டு வந்துள்ளது.
ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் ஸ்வபன் சௌத்ரி-ருனா சௌத்ரி தம்பதியினர். இவருக்கு மோனாலிசா சௌத்ரி எனும் ஒரேயொரு பெண் இருந்தார். இவருக்கும் அதே மாநிலத்தை சேர்ந்த ஷெகாவத் என்பவருக்கும் இடையே சமீபத்தில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் மோனாலிசாவின் தந்தை ஸ்வபன் சௌத்திரிக்கு சம்மதம் இருக்கவில்லை. இருப்பினும் தனது மகளின் விருப்பத்திற்காக இந்த திருமணத்திற்கு பெயரளவில் சம்மதம் தெரிவித்தார்.
திருமணத்திற்கு பின்னர் இந்த ஸ்வபன் சௌத்ரி-ருனா சௌத்ரி தம்பதியினர் தனது மகளுக்கு பிகானரில் ஜெய்ப்பூர் சாலையில் உள்ள பல லட்ச ரூபாய் மதிப்பிலான ஒரு காலி இடத்தை திருமண பரிசாக வழங்கினர். மோனாலிசா சௌத்ரிக்கு சிறு வயதிலிருந்தே நாய்கள் என்றால் மிகவும் பிடிக்கும். எனவே திருமணத்திற்கு பின்னரும் புதிய வீட்டில் நாய்களை வளர்க்க தொடங்கினார். மோனாலிசா மொத்தமாக 4 நாய்களை வளர்த்து வந்துள்ளார். அதில் இவருக்கு மிகவும் பிடித்தது ஜிக்கி எனும் செயிண்ட் பெர்னார்ட் வகை நாய்தான்.

இழப்பு
குடும்பம் இப்படி அமைதியாக போய்க்கொண்டிருக்கையில் திடீரென ஷெகாவத் நடத்திய வணிகத்தில் பெரும் இழப்பு ஒன்று வந்திருக்கிறது. எனவே கையில் வைத்திருந்த நகை பணத்தை கொண்டு இந்த இழப்பை ஷெகாவத் ஈடுகட்டியுள்ளார். அப்போதும் பண நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே தனது மனைவியின் பெயரில் உள்ள காலி இடத்தை விற்று பணத்தை திரட்டி இந்த இழப்பை ஈடுகட்ட அவர் முயன்றுள்ளார். ஆனால் அதற்கு இவரது மனைவி மோனாலிசா ஒப்புதல் தெரிவிக்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக அடிக்கடி சண்டை எழுந்திருக்கிறது. இதன் பின்னர் கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து மோனாலிசாவை காணவில்லை.

புகார்
இது குறித்து ஸ்வபன் சௌத்ரி பிகானேர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதே சமயம் தனது மாப்பிள்ளையான ஷெகாவத்திடம் கேட்டும்போது, "மோனாலிசா மீது வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கிறது. ஒரு நபருக்கு பணம் செலுத்த தவறியதால் அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். எனவே அவர் தலைமறைவாக இருக்கிறார்" என்று கூறியுள்ளார். இருப்பினும் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையை நடத்தி வந்துள்ளனர். இதற்கிடையில் மோனாலிசாவின் தந்தையான ஸ்வபன் சௌத்ரியும் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தனியாக இருந்த ருனா தனது மகள் வளர்த்த செல்ல நாய்களை ஷெகாவத்திடம் கேட்டு வாங்கியுள்ளார்.

நாய்
நாட்கள் இப்படியாக சென்றுக்கொண்டிருந்துள்ளது. கடைசி வரை மோனாலிசா குறித்த தகவல்கள் ஏதும் தெரியவில்லை. மறுபுறம் ருனாவுக்கு உடல் நலம் கொஞ்சம் கொஞ்சமாக மோசமடைய தொடங்கியுள்ளது. எனவே தான் வைத்திருந்த 4 நாய்களை மீண்டும் ஷெகாவத்திடம் கொடுத்திருக்கிறார். மூன்று மாதங்களுக்கு பிறகு உடல்நலன் தேறிய பின்னர் மீண்டும் ருனா 4 நாய்களையும் திரும்ப கேட்டுள்ளார். இதை எதிர்பார்க்காத ஷெகாவத் மூன்று நாய்களை மட்டும் கொடுத்திருக்கிறார். இதில் ஜிக்கி எனும் செயிண்ட் பெர்னார்ட் நாய் மட்டும் மிஸ்ஸிங்.

தலைமறைவு
இது குறித்து ருனா கேட்டதற்கு, ராணுவ வீரர் கேட்டதால் என்று ஜிக்கியை விற்றுவிட்டதாகவும் எனவே ஜிக்கி இப்போது எங்கு இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது எனவும் கூறியுள்ளார். இதை கேட்டு ருனா சற்று ஆத்திரமடைந்தாலும், இந்த விஷயத்தை பெரியதாக்கவில்லை. ஆனால் மீதமிருந்த மூன்று நாய்களில் மற்றொரு நாய்க்கு திடீரென உடல்நலம் மோசமடைந்துள்ளது. இதனால் ருனா தங்கள் குடும்ப மருத்துவரிடம் இந்த நாயை காட்டியுள்ளார். அப்போதுதான் பல விஷயங்கள் வெளியில் வந்துள்ளன. குடும்ப மருத்துவர் "ஏன் இதற்கு முன்னர் இருந்த ஜிக்கியை நீங்கள் மருத்துவமனைக்கு அழைத்துவரவில்லை? உங்களது மருமகன் ஜிக்கியை கடைசி நேரத்தில்தான் கொண்டு வந்தார். அந்நாய் இங்கு வருவதற்கு முன்னர் ஏறத்தாழ பாதி இறந்த நிலையில்தான் இருந்தது" என்று கூறியுள்ளார்.

விசாரணை
இதை எதிர்பார்க்காத ருனா அதிர்ச்சியில் உறைந்துபோனார். உடனடியாக மருமகன் ஷெகாவத்தை நேரில் அழைத்து ஏன் ஜிக்கி உயிரிழந்ததை என்னிடம் மறைத்தாய் என்றும்? இதேபோல என்னுடைய பெண்ணையும் நீ கொன்றுவிட்டாயா? எனவும் கேட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ஷெகாவத் "ஆமாம். உன்னுடைய மகளும் இந்த நாயை போல கொன்று புதைத்துவிட்டேன்" என்று கூறியுள்ளார். இதன் பின்னர் ருனா காவல் நிலையத்தை நாட ஜெய்ப்பூர் கூடுதல் எஸ்பி அமித் குமார் புடானியா ஷெகாவத் வழக்கை மீண்டும் தூசி தட்டி விசாரித்துள்ளார். இந்த முறை விசாரணை கிடுக்குப்பிடியாக இருந்திருக்கிறது.

எலும்புக்கூடு
கடைசியாக ஷெகாவத் உண்மையை ஒப்புக்கொண்டார். ஜெய்ப்பூர் சாலையில் உள்ள பல லட்சம் ரூபாய் மதிப்பிலான காலி இடத்திற்காக மோனாலிசாவை 2021ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதியன்று கொலை செய்து பாக்ருவில் உள்ள குடியிருப்பில் புதைத்துள்ளார். இதனையடுத்து மோனாலிசாவின் உடல் எலும்கூடாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. டிஎன்ஏ பரிசோதனையில் எலும்புக்கூடு மோனாலிசாவினுடையது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட நபரின் வளர்ப்பு நாய் தான் இறந்தும் தனது எஜமானரின் கொலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருப்பது ராஜஸ்தான் முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications