ஊரெல்லாம் சுற்றிவிட்டு மீண்டும் பாஜக கூட்டணிக்கே திரும்பிய பாஸ்வான்
டெல்லி: லோக் ஜனசக்தி கட்சி தலைவர் பாஸ்வான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி மீண்டும் சேர்ந்துள்ள சம்பவம் பற்றி பார்ப்போம்.
கடந்த 2004ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள தனது வீட்டில் இருந்து கிளம்பி அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் ராம் விலாஸ் பாஸ்வானுக்கு புத்தாண்டு வாழ்த்து கூற சென்றார். இது தான் தங்கள் கூட்டணிக்கு புதிய கட்சியை சேர்க்க சோனியா நடத்திய பல சந்திப்புகளில் ஒன்று. அதன் பிறகு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைக்கப்பட்டது. இதையடுத்து நடந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வென்று ஆட்சியை அமைத்தது.
பத்து ஆண்டுகள் கழித்து தேர்தல் நெருங்கும் வேளையில் மீண்டும் 12 ஜன்பத்தில் உள்ள பாஸ்வான் வீடு கவனத்தை ஈர்த்துள்ளது.
பாஜக
இம்முறை பாஜக தலைவர்கள் ராம் விலாஸ் பாஸ்வானை(68) சந்தித்து பேசினர். இரவு நேரத்தில் கூட்டணி உறுதியாகி அறிவிப்பும் வெளியிடப்பட்டது. ஒரு லோக்சபா சீட் கூட இல்லாத லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் தான் ராம் விலாஸ் பாஸ்வான். இந்த ஆண்டு அவரது கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்து பீகாரில் 7 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
பாஸ்வான்கள்
பீகாரில் உள்ள வாக்காளர்களில் 5 சதவீதம் பேர் பாஸ்வான் சமூகத்தினர். பாஜக பிரதமர் வேட்பாளர் மோடியை எதிர்த்தவர்கள் தற்போது ஆதரவு அளிப்பது தான் முக்கியமாக கருதப்படுகிறது.
என்.டி.ஏ.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கடந்த 2002ம் ஆண்டில் வெளியேறினார் பாஸ்வான். குஜராத் கலவரம் தொடர்பாக மோடி நடந்து கொண்ட விதம் குறித்து விமர்சித்தார். ஆனால் தற்போது பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த கூட்டணிக்கு மீண்டும் வந்துள்ளார் பாஸ்வான்.
பீகார்
1999ம் ஆண்டில் ஐக்கிய ஜனதாதளம் மூலம் பாஸ்வான் மற்றும் அவரது ஆதராவளர்கள் தேசிய ஜனநாயக கூட்டணி பிரிக்கப்படாத பீகாரில் 54ல் 41 லோக்சபா சீட்களை கைப்பற்ற உதவினர்.
2004
2004ம் ஆண்டில் லாலு தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதாதளம்-லோக் ஜன்சக்தி கட்சி-காங்கிரஸ் சேர்ந்து பீகாரில் உள்ள 40 இடங்களில் 30 இடங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில் பல ஆண்டுகளாக கூட்டணியில் இருந்த லாலுவின் கட்சிக்கு பாஸ்வான் குட்பை சொல்லிவிட்டார்.
2009
2009ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் பாஸ்வான் கட்சி மண்ணை கவ்வியது. அந்த தேர்தலில் அக்கட்சி பாஜகவுடனும் சரி, காங்கிரஸுடனும் சரி கூட்டணி வைக்கவில்லை.