கொரோனா பரவல்.. அந்தமானில் பான் மசாலா, குட்கா போதைப்பொருள் பயன்படுத்த அதிரடி தடை!
போர்ட் பிளேயர்: தெற்கு அந்தமானில் பான் மசாலா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் விற்பனைக்கு ஒரு மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் யூனியன் பிரதேசமும், அழகிய பிரதேசமுமான அந்தமான்&நிக்கோபார் தீவுகளையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.
அமைதி குடிகொண்டுள்ள அங்கும் கொரோனா உட்புகுந்து அதிக தாக்கத்தை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைத்து விட்டது.

அந்தமானில் கொரோனா தாக்கம்
கடந்த 24 மணி நேரத்தில் அந்தமானில் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 7,043 ஆக உயர்ந்துள்ளது. 143 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்தமான்&நிக்கோபார் தீவுகளில் தெற்கு அந்தமான், வடக்கு அந்தமான் மற்றும் மத்திய அந்தமான் மற்றும் நிக்கோபார் ஆகிய மூன்று மாவட்டங்கள் உள்ளன.

பான் மசாலாதான் காரணம்
இதில் தெற்கு அந்தமானில் கொரோனா தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. மொத்தம் சிகிச்சை பெறுபவர்களில் 134 பேர் தெற்கு அந்தமானில் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு வசிப்பவர்கள், அங்கு வருபவர்கள் பலர் பான் மசாலா, குட்கா போன்ற போதைப் பொருட்களை மென்று சாலைகளில் துப்பி வருகின்றனர்.

விற்பனைக்கு தடை
அவர்கள் கொரோனா நோயாளிகளாக இருப்பின் இதன்மூலம் மற்றவர்களுக்கு கொரோனா பாதிப்பு பரவி வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்த நிலையில் தெற்கு அந்தமானில்பான் மசாலா மற்றும் குட்கா போன்றவை உள்ளிட்ட அனைத்து வகையான போதைப்பொருட்கள் விற்பனைக்கு மாவட்ட கலெக்டர் ஒரு மாதம் தடை விதித்தார்.

கடும் நடவடிக்கை
இந்த போதைப்பொருட்களை தயாரிக்கவும், கடைகளில் பதுக்கி வைப்பதற்கும் அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறும் தனிநபர்கள், கடைக்காரர்கள் ஆகியோர் மீது அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications