இந்தியாவின் முன் வாசலிலும், பின் வாசலிலும் நாசவேலைக்காக காத்து நிற்கிறது தீவிரவாதம்!
டெல்லி: இந்தியாவின் வாசல் எல்லை வரை தீவிரவாதம் வந்து நிற்பதை வாகா குண்டு வெடிப்பு சம்பவம் உறுதி செய்கிறது.
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் உள்ள வாகாவில் அந்த நாட்டு எல்லைக்குள் வைத்து சில நாட்களுக்கு முன்பு நிகழ்த்தப்பட்ட பெரும் குண்டுவெடிப்பு உலகையே உலுக்கியுள்ளது. இப்படி ஒரு சம்பவம் நடக்கப்போகிறது என்பதை இரு வாரங்கள் முன்பே இந்திய உளவு அமைப்பு தெரிவித்துவிட்டதால், இந்திய எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு நமது நாட்டுக்குள் நடக்கவிருந்த குண்டுவெடிப்பு தவிர்க்கப்பட்டது.
இத்தோடு ஆபத்து முடிந்து விட்டதா என்றால் இல்லை என்பதுதான் பதில். இப்போதுதான் பிரச்சினை ஆரம்பித்துள்ளது என்பதுதான் நிதர்சனம். தெரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் ஜமாத் அக்ரார் என்ற தீவிரவாத அமைப்பு பாரத பிரதமருக்கே கொலை மிரட்டல் விடுத்துள்ளது. இது ஏதோ ஒரு நிகழ்வு என்பதோடு முடிந்துவிடப்போவதில்லை. இந்தியாவை எதிர்நோக்கியிருக்கும் இஸ்லாமிய தீவிரவாதத்தின் ஒரு சாம்பிள்தான் இந்த மிரட்டல்.
அல்கொய்தா மிரட்டல்
இந்தியாவில் அல்-கொய்தா தீவிரவாதிகள் கிளை திறக்க உள்ளதாக அதன் தலைவன் அல் ஜவாகிரி வீடியோ மூலம் மிரட்டல்விடுத்து ஆறு மாத கால இடைவெளியில் இந்தியாவை சுற்றிலும், இந்தியாவிற்குள்ளும் பல வகையான தீவிரவாத நடமாட்டங்கள் தென்பட ஆரம்பித்துள்ளன. மேற்கே பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகள் தயாராக நிற்கின்றனர். கிழக்கே வங்கதேசத்திலும் அதே நிலைதான். வங்கதேசத்தில் ஜமாத் உல் இஸ்லாம் தீவிரவாதிகள். பெயர்தான் வேறு, ஆனால் நோக்கம் நாசவேலை மட்டுமே. ஆக, முன்வாசல், பின்வாசல் இரண்டிலும் தீவிரவாதிகள் ஆதிக்கம்தான்.
கிழக்கிலும் ஆபத்து
பர்த்வான் குண்டுவெடிப்பை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் உளவு அமைப்புகள் நடத்திய விசாரணையில், இந்தியாவிற்கு மேற்கே மட்டுமல்ல, கிழக்கில் இருந்தும் ஆபத்து சூழ்ந்துள்ளது என்பது புரிந்துள்ளது. மேற்கு வங்கத்தை தீவிரவாதத்தின் நுழைவு வாயிலாக மாற்ற தீவிரவாதிகள் முயன்றுவருவதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன.
கொல்கத்தா துறைமுகத்துக்கு ஆபத்து
பாகிஸ்தான் ராணுவ உதவியுடன், கொல்கத்தா துறைமுகத்தை தீவிரவாதிகள் தாக்க கூடும் என்ற எச்சரிக்கையை இந்திய உளவு அமைப்பு கொல்கத்தா போலீசாருக்கு அளித்துள்ளது. கொல்கத்தாவில் நிறுத்தப்பட்டிருந்த இந்தியாவின் இரு போர்க்கப்பல்கள் யதேர்ச்சையாக அங்கிருந்து கிளம்பியுள்ள சூழ்நிலையில், கொல்கத்தாவின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய அவசியம் மேற்கு வங்க அரசுக்கு வந்துள்ளது.
அமெரிக்கா எச்சரிக்கை
இந்நிலையில்தான் அமெரிக்க ராணுவ அமைப்பான பெண்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையும் முக்கியத்துவம் பெறுகிறது. அந்த அறிக்கையில், இந்தியாவின் வலிமை மிகுந்த ராணுவத்தை எதிர்கொள்ள முடியாமல், தீவிரவாதிகளின் துணையுடன் இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தனது செல்வாக்கை நிலை நாட்ட அந்த நாட்டிலும் தீவிரவாதிகள் உதவியுடன் பாகிஸ்தான் ஊடுருவுகிறது என்கிறது பெண்டகன்.
இந்திய தீவிரவாதிகள் ஒன்றிணைப்பு
இந்தியாவில் தாக்குதல்களை நடத்த இங்குள்ள தீவிரவாத இயங்கங்களுடன் ஒன்றிணைந்து செயல்பட தொடங்கியுள்ளது அல்கொய்தா. இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளுடன் அல்-கொய்தா நடத்தியுள்ள உரையாடல்கள் இந்திய உளவுத்துறையிடம் உள்ளன. சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு முளையிலேயே கிள்ளப்படாததால் எந்த அளவுக்கு உள்நாட்டுக்கு ஆபத்தில் போய் முடிந்தது என்பது கண்முன் நிகழ்ந்த வரலாறு. அதே நிலை இந்தியாவுக்கும் ஏற்படாமல் தடுக்க முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உளவுத்துறை மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது.
மாநில அரசுகள் அக்கறையின்மை
ஆனால் மாநில காவல்துறையின் திறமையின்மையை மேற்கு வங்க குண்டு வெடிப்பு சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. மத்திய உளவுத்துறையுடன் இணைந்து மாநில அரசுகள் பாதுகாப்பை பலப்படுத்த தவறி வருவகின்றன என்பதையும் சில சம்பவங்கள் வெளிக்கொண்டு வந்துள்ளன. தேசிய ஆபத்துகால கட்டமைப்பு பாதுகாப்பு கொள்கை.யை உருவாக்க மத்திய அரசு தயாராகிவருகிறது. மத்திய-மாநில பாதுகாப்பு அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகியுள்ளது.