ஈராக் புனிதத் தலங்களைப் பாதுகாக்க செல்ல தயாராகும் இந்திய ஷியா முஸ்லிம்கள்!
டெல்லி: ஈராக்கில் உள்ள புனிதத் தலங்களைப் பாதுகாக்க செல்வதற்கு தயாராக இருப்பதாக ஆயிரக்கணக்கான இந்திய ஷியா முஸ்லிம்கள் அறிவித்துள்ளனர்.
ஈராக்கில் ஆளும் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிரான சன்னி முஸ்லிம்கள் ஆயுதமேந்தி உள்நாட்டுப் போரை நடத்தி வருகின்றனர். சன்னி முஸ்லிம்களின் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பானது ஈராக் நாட்டின் பெரும்பாலான நகரங்களைக் கைப்பற்றியுள்ளது. இந்த மோதலில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
இணைந்தது அல்கொய்தா
தலைநகர் பாக்தாத்தை பல முனைகளில் வியூகம் வகுத்து ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு முற்றுகையிட்டுள்ளது. இந்த அமைப்பினருடன் அல்கொய்தா இயக்கமும் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது.
சிரியா வான்வழி தாக்குதல்
மேலும் ஈராக்கில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் முகாம்கள் மீது சிரியா வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்தியர்கள் பரிதவிப்பு
அத்துடன் 39 இந்தியர்கள் பிணைக் கைதிகளாக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரிடம் சிக்கியுள்ளனர். 49 இந்திய செவிலியர்கள் திக்ரீத் நகரில் தவித்து வருகின்றனர்.
அஞ்சுமன் ஈ ஹைதேரி
இந்த நிலையில் டெல்லியில் நேற்று ஒன்று திரண்ட அஞ்சுமன் ஈ ஹைதேரி என்ற அமைப்பினர் ஈராக்கில் உள்ள கர்பலா உள்ளிட்ட புனிதத் தலங்களைப் பாதுகாப்பதற்காக தாங்கள் அந்நாட்டுக்கு செல்ல தயாராக இருப்பதாக விண்ணப்பம் ஒன்றில் கையெழுத்திட்டனர்.
ஷியா மதகுரு
இவர்கள் அனைவரும் ஷியா மத குரு ஒருவரின் ஆணையை ஏற்று ஒன்று திரண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஏற்கெனவே ஈராக்கில் இந்தியர்கள் தத்தளித்து வரும் நிலையில் இவர்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுக்காது என்றே தெரிகிறது.