கன்னடர்களுக்கு எதிரான போஸ்டர்: சென்னை-பெங்களூர் போலீஸ் கமிஷனர்கள் அவசர ஆலோசனை
பெங்களூர்: சென்னையில், கன்னடர்களுக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களுக்கு கன்னட அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தென் சென்னையின் பல பகுதிகளிலும் ஆயிரம் விளக்கு விஜய் என்பவர் ஒட்டியுள்ள போஸ்டரில், ஜெயலலிதாவை உடனே விடுதலை செய், இல்லையென்றால் தமிழகத்தில் வாழும் கன்னடர்களை சிறைபிடிப்போம் என்ற மிரட்டல் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
இந்த போஸ்டரில் நிர்வாகிகள் கலைராஜன், பா.வளர்மதி, குமார் ஆகியோர் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இது கன்னடர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னட மீடியாக்களில் இந்த செய்தி ஒளிபரப்பானதும் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

இந்த போஸ்டருக்கு கன்னட அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. காவிரி பிரச்சினையின்போது பெங்களூரில் தமிழர்களும், தமிழகத்தில் கன்னடர்களும் தாக்கப்பட்டனர். எனவே இந்த செய்தியை பார்த்ததும், பெங்களூர் போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி போன் மூலம் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை தொடர்பு கொண்டு, கன்னடர்கள் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
கன்னடர்கள் தாக்கப்பட்டால் பெங்களூரில் சட்டம் ஒழுங்கு கெடும் வாய்ப்புள்ளதாக தனது கவலையை ரெட்ட, ஜார்ஜிடம் தெரிவித்தார். இந்த நிகழ்வுகள் குறித்து பெங்களூர் கூடுதல் போலீஸ் கமிஷனர் ஹேமந்த் நிம்பால்கரிடம் கேட்டபோது "ஜார்ஜை தொடர்பு கொண்டு பெங்களூர் போலீஸ் கமிஷனர் வேண்டுகோள்விடுத்துள்ளார். சென்னையில் உள்ள கன்னடர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதாகவும், போஸ்டர் வைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் ஜார்ஜ் உறுதியளித்துள்ளார். பெங்களூரிலுள்ள தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பை அளிப்போம். இரு மாநிலங்களுக்கு நடுவே இயக்கப்படும் பஸ்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்" என்றார்.
இந்த போஸ்டர் விவகாரத்தால், பெங்களூர், மைசூர், கோலார் தங்கவயல், ஷிமோகா ஆகிய பகுதிகளில் வசிக்கும் லட்சக்கணக்கான தமிழர்கள் அச்சத்திலுள்ளனர். ஒரு சட்டரீதியான விவகாரத்தை இரு மக்களுக்கு எதிரான விவகாரமாக மாற்றி வருகின்றனர் அதிமுகவினர் என்பது கவலையான விஷயம்.












Click it and Unblock the Notifications