ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத குழுவில் இணைந்த மும்பை வாலிபர்கள் நாடு திரும்ப முடிவு
கல்யாண்: ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்துள்ள மும்பை இளைஞர்கள் நாடு திரும்ப முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவை சேர்ந்த ஏழை இஸ்லாமிய இளைஞர்கள் சிலர், ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை பிடித்து வைத்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளதாக பரவலாக பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் மும்பையில் உள்ள கல்யாண் பகுதியை சேர்ந்த நான்கு வாலிபர்களான ஆரிப் மஜித், ஷகின் டாங்கி, பகத் ஷெய்க் மற்றும் அமன் டாண்டே ஆகியோர் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்தது சில தினங்களுக்கு முன் தெரியவந்தது.
சுற்றுலா குழுவினருடன் ஈராக் சென்ற அவர்கள் திடீரென காணாமல் போனார்கள். பின்னர் தங்களது குடும்பத்தினரை தொடர்பு கொண்ட நான்கு இளைஞர்களும் தாங்கள் ஐ.எஸ். தீவிரவாத குழுவில் இணைந்துள்ளதாக தெரிவித்தனர்.
நாடு திரும்ப முடிவு
சில தினங்களுக்கு முன் இக்குழுவில் உள்ள ஆரிப் மஜித் சிரியாவில் நடைபெற்ற மோதலில் கொல்லப்பட்டதாக ஆரிப்பின் குடும்பத்தாரிடம் டாங்கி தெரிவித்துள்ளார். இந்நிலையில் எஞ்சியுள்ள மூவரும் நாடு திரும்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாயமான இளைஞர்கள்
இவர்கள் கடந்த மே மாதம் பெற்றோருக்கு தெரியாமல் புனித பயணம் மேற்கொண்டவர்களுடன் ஈராக் சென்றதாக தெரிகிறது. இது தொடர்பாக புனித பயணம் மேற்கொண்டவர்களிடம் பெற்றோர் விசாரித்தனர். ஈராக் சென்றதும் அந்த இளைஞர்கள் தங்களை விட்டு பிரிந்து, போர் நடைபெறும் பலூஜா நகருக்கு சென்று விட்டதாக தெரிவித்தனர்.
இந்தியாவிற்கு எப்போது
கடந்த 6ஆம் தேதி தனது தாயையும் சகோதரனையும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட டாங்கி இத்தகவலை தெரிவித்துள்ளார். ஆனால் வந்து சேருவதற்கான தேதியை அவர் குறிப்பிட்டு செல்லவில்லை.
தண்டனை இல்லை
இந்த மூன்று இளைஞர்களும் இந்தியாவில் எந்த வித குற்றச்செயல்களில் ஈடுபடாததால் அவர்கள் மீது எந்த விதத்திலும் நடவடிக்கை எடுக்க முடியாது என காவல்துறை வட்டாரங்களும் கருத்து தெரிவித்தன.
18 இந்தியர்கள்
சென்னை இளைஞர் உள்பட 18 இந்தியர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்துள்ளதாக மத்திய புலனாய்வு பிரிவு தகவல்கள் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.