காஷ்மீரில் மீண்டும் வன்முறை: 3 பேர் உயிரிழப்பு; 150 பேர் படுகாயம்
ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் 3 பேர் பலியாகினர். 150 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் வன்முறைச் சம்பவங்களுக்கு பலியானோரின் எண்ணிக்கை 53-ஆக உயர்ந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் முக்கிய கமாண்டரான பர்ஹான் வானியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றதையடுத்து வன்முறை வெடித்தது. இந்த வன்முறைக்கு இதுவரை 53 பேர் பலியாகியுள்ளனர். 5,500 பேர் காயமடைந்துள்ளனர்.இதையடுத்து சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்க அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், பட்காம் மாவட்டம், நகம் எனுமிடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் கலந்து கொண்ட சிலர், பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, அவர்களைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில், முகமது மக்பூல் கான்டே என்பவர் பலியானார்.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் வன்முறை பரவியது. கான்சாஹிப் எனுமிடத்தில் போராட்டகாரர்களைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 3 இளைஞர்கள் காயமடைந்தனர். இதில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிந்தார். இதேபோல், சோபோரில் இளைஞர் ஒருவர் பலியானார்.
பாராமுல்லா மாவட்டம், குப்வாரா மாவட்டம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் 150 பேர் காயமடைந்தனர். முன்னதாக, பிரிவினைவாதிகள் பேரணி செல்வதை தடுக்கும் வகையில் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து வன்முறையில் ஈடுபடும் இளைஞர்களை குறிவைத்து போலீசார் கைது செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications