நாடாளுமன்றத் தேர்தல் 2014: தனித்துப் போட்டியிட திரிணாமுல் காங்கிரஸ் முடிவு
கொல்கத்தா: நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு செய்திருப்பதாக அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாரதிய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிராக தான் தங்களின் போட்டி இருக்கும் எனத் தெரிவித்தார்.
மேலும், ஊழலுக்கு எதிராகவும் தங்களின் போட்டி அமையும் என்றும், காங்கிரஸ் கட்சிக்கு மாற்றுக்கட்சி பாரதிய ஜனதா அல்ல என்றும், பாரதிய ஜனதாவுக்கு மாற்றுக் கட்சி காங்கிரஸ் அல்ல என்றும் அவர் கூறினார்.
அதேசமயம், மத்தியில் மாற்றம் தேவை, திரிணாமுல் காங்கிரஸ் தான் மாற்றத்திற்கான கட்சி. தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ், பாரதிய ஜனதா, மார்க்சிஸ்ட் அல்லாத கட்சிகளை இணைத்து புதிய அணி அமைக்கப்படும் என மம்தா பானர்ஜி கூறினார்.